மதுரையில் பிப்ரவரி 3ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை : மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
மதுரையில் பிப்ரவரி 3ஆம் தேதி வரை போராட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி முதல் இரவு பகலாக போராடி வருகின்றனர்.
மதுரை தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராடி வருகின்றனர். வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்பது இவர்களின் முழக்கமாக உள்ளது.
கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிரதமர் மோடி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையேயான சந்திப்பினால் எந்த பயனும் ஏற்படவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, ஆனாலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதனால் கொதிப்படைந்த மக்கள், தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டுள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்திற்குள் புகுந்த மாணவர்கள், தண்டவாளத்தில் அமர்த்து போராடி வருகின்றனர். மதுரை செல்லூரில் ரயில்வே மேம்பாலத்தில் சென்ற ரயிலை மறித்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ரயில்வே மேம்பாலத்தில் ஏறிய ஆயிரக்கணக்கானோர் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை திடீரென மறித்து போராட்டம் நடத்தினர். ரயில் எஞ்சின் மீது ஏறி மறித்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மதுரை மாநகரில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த போலீசார் தடை வித்தித்துள்ளனர். ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் 5 நாட்களுக்கு முன், அனுமதி பெற வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்தார். தடையை மீறி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் போராட்டம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து வரும் நிலையில் போராட்டத்தை நசுக்க காவல்துறையும், அரசும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.