மதுரையில் ரஜினி ரசிகர்களுக்கு 200 கிலோ சிக்கன், மட்டன் விருந்து
மதுரையில் ரஜினி ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினர்.
Recommended Video
மதுரை: அழகர்கோவிலில் ரஜினி ரசிகர்களுக்கு கெடா கறி, சிக்கன், முட்டை என அசைவ விருந்து அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
கடந்த மாதம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, மதுரைன்னா வீரம், உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போடணும்னு ஆசை. ஆனால், இந்த மண்டபத்தில் போட வாய்ப்பில்லை, ஒருநாள் அதற்கு ஏற்பாடு செய்வேன் என்று பேசி உற்சாகப்படுத்தினார்.
இதனையடுத்து அழகர்கோவிலில் கிடா வெட்டி கறி விருந்து போட உள்ளதாக பேச்சு எழுந்தது. ஆனால் பீட்டா சார்பில் ரஜினிக்கு கடிதம் எழுதப்பட்டது. உடனே கெடா வெட்டு கிடையாது விருந்து மட்டுமே என்ற அறிவிப்பு வெளியானது.
ரஜினி ரசிகர்கள் சந்திப்பு
ரஜினி ரசிகர்கள் நேற்றைய தினம் மதுரை அழகர் கோயில் அருகே திருமண மண்டபத்தில் சந்தித்தனர். அப்போது அனைவருக்கும் ஆட்டுக்கறி விருந்தளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் விருந்து பரிமாறி அசத்தினர். கிடா வெட்டாமல் வெளியிலிருந்து கறி சமைத்து எடுத்துவந்து விருந்து வைத்தார்கள்.
200 கிலோ மட்டன்
அழகர்கோவிலில் நடந்த விருந்தில் 200 கிலோ சிக்கன், 200 கிலோ மட்டன், 1000 முட்டைகள் சமைக்கப்பட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் விருந்து பரிமாறப்பட்டது. இந்த விருந்தினை ரஜினியின் அரசியல் வருகைக்காக ரசிகர்களே ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடு வெட்டவில்லை
ஆடு வெட்ட மாட்டோம் என்று கூறிய நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தவே அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினர் ரசிகர்கள். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. இந்த ரசிகர்கள் சந்திப்பில் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கல்வி உதவித்தொகை
மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு தையல் எந்திரம், வேட்டி - சேலை, சில்வர் பானைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கள், மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். அவர் சில மணிநேரமே அமர்ந்திருந்தார்.