அழகர் கோவில் விருந்து..."நோ கிடா வெட்டு"... பீட்டாவின் மிரட்டலால் பின்வாங்கிய ரசிகர்கள்!
மதுரை அழகர் கோவில் திருவிழாவில் கிடா வெட்டு கிடையாது என்று ரஜினி ரசிகர் மன்றத்தினர் அறிவித்துள்ளனர்.
Recommended Video
மதுரை : மதுரை அழகர் கோவில் திருவிழாவில் கிடா வெட்டு கிடையாது, ஆனால் விருந்து உண்டு என்று அந்த மாவட்ட ரசிகர்கள் அறிவித்துள்ளனர். கோவிலில் கிடா வெட்டு நடத்தக் கூடாது என்று பீட்டா ரஜினிக்கு கடிதம் எழுதியதையடுத்து ரசிகர்கள் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 26 முதல் 31வரை ரஜினி மாவட்ட வாரியாக விடுபட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மதுரை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பேசும் போது, நீண்டி தூரம் பயணித்து வந்திருந்தாலும் ரசிகர்கள் முகத்தில் சோகம் இல்லை உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் மதுரை ரசிகர்களுக்கு கறி சோறு போட வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவிற்கு மட்டுமே அனுமதியுண்டு. எனவே வேறொரு தருணத்தில் பார்க்கலாம் என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசி இருந்தார்.
மோப்பம் பிடித்த பீட்டா
இந்நிலையில் மதுரை ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை கொண்டாடும் வகையில் ஜனவரி 7ம் தேதி மதுரை அழகர் கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த பீட்டா அமைப்பு, ரஜினி மூலம் கிடா வெட்டு பிரச்னையை கையில் எடுத்துள்ளது.
கிடா விருந்து வேண்டாம்
இது தொடர்பாக நடிகர் ரஜினிக்கு பீட்டா எழுதியுள்ள கடிதத்தில் கோவிலில் கிடா வெட்டு நடத்தக் கூடாது. 2001 சட்டப்படி இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று பீட்டா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது.
பீட்டா எச்சரிக்கை
ஆடு, மாடு, எருது உள்ளிட்ட விலங்குகளை கொல்பவர்களுக்கு சிறைத்தண்டனை முதல் அதிகபட்ச அபராதம் வரை விதிக்கப்பட சட்டத்தில் வாய்ப்பு இருப்பதாகவும் பீட்டா அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. ரஜினியின் போயஸ் கார்டன் இல்ல முகவரிக்கு பீட்டாவின் இந்த மிரட்டல் ரீதியிலான கடிதம் வந்துள்ளது.
ரசிகர்கள் பின்வாங்கினர்
இதனையடுத்து ஜனவரி 7ம் தேதி அழகர் கோவிலில் கிடா விருந்து கிடையாது என்று மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் அறிவித்துள்ளனர். கிடா விருந்து மட்டுமே கிடையாது ஆனால் விருந்து உண்டு என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பீட்டா ரஜினிக்கு எழுதிய கடிதத்தையடுத்து ரசிகர்கள் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.