ஃபீஸ் கட்ட முடியாட்டி மாடு மேய்ங்க... முறுக்கு விக்க போங்க... மதுரை தலைமை ஆசிரியரின் எகத்தாள பேச்சு
கல்வி கட்டணம் செலுத்த முடியாவிட்டால் மாடு மேய்க்க செல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் தூற்றுவதாக மாணவர்கள் மதுரை ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
Recommended Video
மதுரை: கல்வி கட்டணம் செலுத்த முடியாவிட்டால் மாடு மேய்க்கவும் முறுக்கு விற்கவும் செல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் கண்டபடி பேசுவதாக மதுரை மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
மதுரை ஆட்சியரகத்தில் நேற்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவ ராவ் குறைகளை கேட்டறிந்தார். அப்போது உசிலம்பட்டியில் உள்ள எஸ்.டி.ஏ பள்ளி மாணவர்களும் சீருடையில் வந்தனர்.
அவர்களை விசாரித்த போது அவர்களும் குறை தீர்க்க மனு கொடுக்க வந்ததாக கூறப்பட்டது. அப்போது மாணவர்கள் கொடுத்த புகார் மனுவை ஆட்சியர் படித்து பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறோம். மத்திய அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ் அந்த பள்ளியில் கடந்த 2011-ஆம் ஆண்டு சேர்ந்து அதே பள்ளியில் தொடர்ந்து படித்து வருகிறோம்.
எங்கள் பள்ளிக்கு புதிய முதல்வர் பொறுப்பேற்றுள்ளார். மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கான கல்வி கட்டணம் வரவில்லையாம். எனவே பள்ளிக்கு வரக் கூடாது என்று கூறிவிட்டார். எனினும் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வருகிறோம்.
கல்வி கட்டணம் வராததால் எங்களை வெயிலில் நிற்குமாறு கொடுமைப்படுத்துகிறார். மேலும் அவதூறு வார்த்தைகளை பேசுகிறார். பள்ளி கட்டணம் செலுத்த முடியாவிட்டால் மாடு மேய்க்க செல்லுங்கள். இங்கு வராதீர்கள் என்கிறார். அதுவும் முடியாவிட்டால் கடை கடையா ஏறி இறங்கி முறுக்கு விற்க சொல்கிறார்.
இதனால் நாங்கள் கட்டணத்தை செலுத்துவதாக கூறிவிட்டோம். ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகம் கட்டணம் கேட்கிறார். எனவே அவர் மீிது நடவடிக்கை எடுங்கள் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.