வறண்டு கிடக்கும் தமிழக அணைகள்.. கவலையில் விவசாயிகள்
மதுரை: பருவமழை இன்னும் தொடங்காத காரணத்தால் பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்துள்ளது. வைகை அணை நீர் மட்டம் வற்றிப்போய்விட்டதால் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் இதுவரை பருவ மழை தொடங்கவில்லை. இதனால், அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
நேற்று காலை பெரியாறு அணை நீர் மட்டம் 112.90 அடியாக சரிந்துள்ளது. . வினாடிக்கு 117 கனஅடி மட்டுமே தண்ணீர் வத்து உள்ளது. விவசாயத்திற்காக 300 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
வறண்ட வைகை அணை
வைகை அணை 29.76 அடியாகி வறண்ட நிலை காணப்படுகிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட வரத்து இல்லை. குடிநீருக்காக 40 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பாசனத்திற்கு தண்ணீர்
பெரியாறு இருபோக ஆயக்கட்டில் தேனி மாவட்டத்திலுள்ள 14,800 ஏக்கர் பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் கடந்த 1ம் தேதி முதல் குறைந்த அளவாக திறக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரம் ஏக்கருக்கு இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
பொய்த்துப்போன பருவமழை
கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து, பெரியாறு பாசனத்தில் நெல் விளையும் பூமி தரிசானது. இந்த ஆண்டாவது மழை பெய்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். பருவமழை தாமதம் ஆவது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
மதுரை நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. வைகை அணையில் தண்ணீர் இருப்பு குறைந்ததால், கடந்த பிப்ரவரி முதல் குடிநீர் சப்ளை அளவு குறைக்கப்பட்டு, 4 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
பருவமழையை நம்பி
அப்படி இருந்தும் மே மாதம் அணையில் தண்ணீர் முழுமையாக காலியாகும் நிலை ஏற்பட்ட கடைசி நேரத்தில் கோடை மழை பெய்து காப்பாற்றியது. பருவ மழை ஜூன் முதல் வாரம் ஆரம்பமாகி அணைக்கு தண்ணீர் வந்ததும், குடிநீர் சப்ளை சீராகும் என தெரிவிக்கப்பட்டது.
20 நாட்களுக்கு மட்டும் தண்ணீர்
ஆனால் மழை ஏமாற்றி வருவதால், வைகை அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூடவரவில்லை. இதனால் நீர் மட்டம 29.76 அடியாக சரிந்து அணை குட்டை போல் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. மழை பெய்து நீர் மட்டம் உயரும் வரை 4 நாட்களுக்கு ஒரு முறையிலேயே குடிநீர் சப்ளை நீடிக்கும். அதன்படி இன்னும் 20 நாட்களுக்கு தாக்குபிடிக்கும்.
பாபநாசம் அணையில்
மேற்குத் தொடர்ச்சி மலையில் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை பாபநாசம் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 857.64 கனஅடியாக அதிகரித்ததை தொடர்ந்து நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
கார்பருவ சாகுபடி தாமதம்
தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்க வேண்டிய பருவத்தில் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் பாசனத்திற்கு இன்னமும் தண்ணீர் திறக்கவில்லை. கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தாமதம் ஏற்படுவதால் சாகுபடியும் தாமதம் ஆகும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளது.
மிதமான மழை
இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 1 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 4 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 7 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை நீடிப்பபதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு:
இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட பாபநாசம் அணைக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 857.64 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 49.30 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணை
குடிநீருக்காக அணையில் இருந்து 204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.16 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 65.94 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 53.30 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 60.25 அடியாகவும் இருந்தது.
மழை நம்பும் விவசாயிகள்
இந்த ஆண்டு பருவமழை பெய்தால் மட்டுமே அணைகள் நிரம்பும் விவசாயப்பணிகளை தொடங்கமுடியும் என்கின்றனர் விவசாயிகள்.