வறண்ட வைகை அணை: மதுரைக்கு குடிநீர் பஞ்சம்... அழகர் வரும்முன் தண்ணீர் வருமா?
மதுரை: மதுரை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் மழை பெய்தபோதும், வைகை அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு இருப்பதால், குடிநீர் திட்டங்கள் மூலம் மே 6ஆம் தேதி முதல், மதுரை மாநகருக்கு வைகை தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை, தேனி மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததால், பெரியாறு, வைகை அணைகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது.
கேரள மாநிலப் பகுதியில் பெய்த மழையின் மூலம் பெரியாறு அணைக்கு சில நாள்களாக தினமும் விநாடிக்கு 274 கனஅடி தண்ணீர் வரத்து இருக்கிறது. இதனால், பெரியாறு அணையை நம்பியுள்ள தேனி உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர்த் திட்டங்களுக்கு தினமும் 100 கனஅடி தண்ணீர் திறப்பதில் சிக்கல் இல்லை.
வறண்ட அணை
அதேசமயம், வைகை அணைக்கு முக்கிய தண்ணீர் ஆதாரமான கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட மூல வைகைப் பகுதியில் மழை இல்லாததால், அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. முற்றிலும் தண்ணீர் வரத்து இல்லாததால், வைகை அணை வறண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, வைகை அணையில் 21.39 அடி தண்ணீர் இருந்தது.
1 கனஅடிநீர் மட்டுமே
இதில், மதுரை மற்றும் ஆண்டிபட்டி உள்ளிட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக தினமும் விநாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதில், இன்னும் 1 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடக் கூடிய நிலை இருக்கிறது. சேறு கலந்திருப்பதால், 1 கனஅடி தண்ணீரையும் முழுமையாக குடிநீருக்கு திறக்க முடியுமா என்ற இக்கட்டான நிலையும் உருவாகியுள்ளது.
தண்ணீர் வரத்து இல்லை
3 நாள்களாக மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு இருந்தாலும், வைகை அணைக்கு தண்ணீர் கிடைக்கக் கூடிய பகுதிகளில் சாரல் மழைதான் பெய்துள்ளது. இந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை.
குடிநீர் தட்டுப்பாடு
இந்த இக்கட்டான நிலையில், மே 6ஆம் தேதி முதல் வைகையிலிருந்து குடிநீர்த் திட்டங்களுக்கான தண்ணீர் திறப்பிலும் சிக்கல் உருவாகியுள்ளது. இதனால், மதுரை மாநகராட்சியில் 2 வைகை குடிநீர்த் திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் முந்தைய 72 வார்டு பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லாரி மூலம் தண்ணீர்
லாரிகள் மூலம் சுற்றுப்புறங்களில் பெறப்படும் தண்ணீரை விநியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இத்தண்ணீரையும், மாநகராட்சி முழுவதும் முறையாக விநியோகிக்கவும் வாய்ப்பில்லாத நிலை இருக்கிறது.
சித்திரை திருவிழாவில்
மேலும், பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் திரளக்கூடிய நிலையில், குடிநீர்ப் பிரச்னை மதுரை மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.