கோவில் திருவிழாவுக்கு வருவதாக சொல்லியவன் வராமலேயே போய் விட்டானே.. அண்ணன் கதறல்
சென்னை: ஆடி மாதம் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு வந்து விடுவேன் என்று கூறியவன் கடைசியில் இப்படி கட்டட விபத்தில் சிக்கி பிணமாகி விட்டானே என்று சென்னை சம்பவத்தில் உயிரிழந்த முருகேசன் என்ற மதுரைத் தொழிலாளியின் அண்ணன் கதறி அழுதது அனைவரையும் வேதனைப்படுத்தியது.
நேற்று ராயப்பேட்டை மருத்துவமனையில் மதுரை திருமங்கலம், பாண்டியன் நகரைச் சேர்ந்த முருகேசன் என்ற 30 வயது கட்டுமானத் தொழிலாளியின் உடலை அவரது அண்ணன் சபரிநாதன் அடையாளம் காண்பித்தார்.
தனது தம்பியின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களுடைய சொந்த ஊர் மதுரை திருமங்கலம், பாண்டியன் நகர். எங்கள் குடும்பத்தில் மொத்தம் 7 ஆண் பிள்ளைகள், 1 பெண். இதில் முருகேசன் கடைசியாக பிறந்தவர்.
அவருக்கு திருமணம் முடிந்து 6 வயதில் முத்துவேல் என்ற மகன் உள்ளான். முருகேசன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் இங்கு பணிக்கு வந்துள்ளான். கடைசியாக அவன் எங்களது தாயிடம் சம்பவம் நடந்த சனிக்கிழமை காலை பேசினான். அப்போது ஆடி மாதம் கோவில் திருவிழாவுக்கு வருவதாக கூறி இருக்கிறான். ஆனால் அதற்குள் போய்விட்டானே.
விபத்து குறித்து செய்தியில் பார்த்ததும் உடனே அவனுடைய செல்போனுக்கு தொடர்புகொண்டேன். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் உடனே நான் சென்னை புறப்பட்டு வந்தேன். 3 நாட்களாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனையில் காத்துக்கிடந்தேன். இப்போது தான் கண்டுபிடித்தேன் என்றார் அவர்.