இதற்கெல்லாமா தற்கொலை செய்வது… வழுக்கைக்காக வாழ்க்கையை இழக்கலாமா?
முடி உதிரும் பிரச்னை அதிகமானதால், மதுரைச் சேர்ந்த வாலிபர், தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை: தற்கொலை என்பது எந்தப் பிரச்னைக்குமே தீர்வாக அமையாது. ஆனால், சின்ன சின்ன காரணங்கள், தோல்விகளைக் கூட தாங்க முடியாமல் இளம் வயதினர் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.
மதுரையை சேர்ந்தவர் மிதுன் ராஜ், 27 வயது வாலிபர். சாப்ட்வேர் இன்ஜினியரான அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவருடைய தாய் செய்து வந்தார்.
கணவரை இழந்த நிலையில், மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைத்த அந்த தாய், கடைக்குட்டியான மிதுனுக்கு உகந்த மாதிரி மருமகளை தேடி வந்தார்.
சில காலம் சென்னையிலும், கடைசியாக பெங்களூரிலும் பணியாற்றி வந்த மிதுனுக்கு, தோல் நோய் பிரச்னை இருந்தது. கூடவே முடி உதிரும் பிரச்னை.
முடி உதிரும் பிரச்னையால் மனதளவில் தளர்ந்திருந்த அவர், திருமணப் பேச்சை மறுத்து வந்தார். முடி கொட்டி முழுவதும் வழுக்கை விழுந்தால் மனைவி ஏற்பாரா என்று குழம்பி வந்த அவர், மதுரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.