4 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பியது மதுராந்தகம் ஏரி... மகிழ்ச்சியில் 10 கிராம விவசாயிகள்
மதுராந்தகம்: பெய்து வருகின்ற பேய் மழைக்கு மதுராந்தகம் பெரிய ஏரி நிரம்பி வழிகின்றது. இதனால் பத்து கிராம விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள மானம்பதி ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, தாம்பரம் பெரிய ஏரி, கடப்பேரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி, சேலையூர் ஏரிகள் உள்பட 97 ஏரிகள் நிரம்பி உள்ளன. மற்ற ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பி உள்ளது. தற்போது நீர்மட்டம் 22.4 அடி ஆக உள்ளது. நேற்று காலை முதல் இரவு வரை ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே இன்று அல்லது நாளைக்குள் ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 660 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரியில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த 2753 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். ஏரியில் நீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. ஏரியில் உள்ள 5 மதகுகளும், கரைகளும் பாதுகாப்புடன் நல்ல நிலையில் உள்ளன. வருவாய்த்துறையினருடன் இணைந்து ஏரியை கண்காணித்து வருகிறோம்" என்றார்.