மதுராந்தகம் அருகே லாரி - மினி லாரி மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பலி.. பலர் காயம்
லாரியும் - மினிலாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை மீறி லாரி ஒன்று எதிரே வந்த மினி லாரி மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு சரக்கு லாரி ஒன்று இன்று காலை வந்துகொண்டிருந்தது. மதுராந்தகத்தை அடுத்த செங்குந்தர்பேட்டை அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி லாரி தாறுமாறாக ஓடியதுடன், சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி எதிர்புறம் வந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் மினி லாரியில் இருந்த ஓட்டுனர் ஏழுமலை உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், லாரியில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் பலியானவர்கள் மதுராந்தகம் அருகே உள்ள ரைஸ்மில்லில் பணிபுரிந்து வரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்றும், நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக மேல்மருவத்தூர் செல்லும் வழியில் இந்த விபத்தில் சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.