பெரியபாண்டிக்கு நகைக்கடை உரிமையாளர்கள் மவுன அஞ்சலி - மதுரவாயலில் கடையடைப்பு
ராஜஸ்தானில் வீரமரணம் அடைந்த பெரியபாண்டிக்கு மதுரவாயலில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து அவரது உருவப்படத்தை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டிக்கு மதுரவாயலில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். தங்கள் கடைகளை அடைத்து உருவப்படத்தை கையில் ஏந்தி மவுன ஊர்வலம் வந்து மரியாதை செய்தனர்.
நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிச்சென்ற நாதுராம் ராஜஸ்தானில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்து அவரை பிடிக்கச் சென்ற தனிப்படை போலீஸார், பிடிக்கும் முயற்சியில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணைமுதல்வர் ஓபிஎஸ், டிஜிபி, காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடப்பதை ஒட்டி மதுரவாயலில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து அவரது உருவப்படத்தை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தது. இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு முதல்வர், காவல் உயர் அதிகாரிகள் கருப்புப்பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர். மாலையில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும்.
இந்நிலையில் மதுரவாயலில் தான் பணியாற்றிய காலத்தில் அன்புடன் பழகிய பெரியபாண்டி அனைவரின் அபிமானத்தையும் பெற்றிருந்தார். நகைக்கடை கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த பெரிய பாண்டிக்கு தங்கள் மரியாதையை தெரிவிக்கும் வகையில் மதுரவாயலில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து பெரியபாண்டியின் உருவப்படத்தை கையில் ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.