வலுக்கிறது இழுபறி… எடப்பாடி பழனிச்சாமி கபட நாடகம் ஆடுகிறார்.. மதுசூதனன் டமால்
பிளவுபட்டுள்ள இரண்டு அணிகள் இணைவதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. இதுதொடர்பான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கபட நாடகம் ஆடுகிறார் என்று மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: இரு அணிகளின் இணைப்பிற்கான பேச்சுவார்த்தைக்கு பழனிச்சாமி ஒத்துவரவில்லை என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி இணைக்க வேண்டும் என்று முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் டிடிவி தினகரன் கைது அதனை மேலும் வேகப்படுத்தியது.
தினகரன் கைதுக்கு பின்னர் இரண்டு அணிகளும் உடனடியாக இணைந்து விடுவார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், முக்கிய தலைவர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறதே தவிர முடிவு எதுவும் எட்டப்படாமல் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.
நிபந்தனை
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் அணியின் பிரதான கோரிக்கை. அதே போல பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
ரகசியம்
அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வைத்திலிங்கம், செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து பேசினார்கள். ஆனாலும், பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே போகிறதே தவிர முடிவிற்கு வரமுடியவில்லை.
சந்தேகம்
இதனால், எடப்பாடி அணியினர் தங்களை ஏமாற்றுவதாக பன்னீர் அணியினர் சந்தேகபடுகின்றனர். இரு அணிகளையும் இணைக்க உண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை என்றே ஓபிஎஸ் தரப்பில் கருதப்படுகிறது.
கபட நாடகம்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் மதுசூதனன், பேச்சுவார்த்தை விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி கபட நாடகம் ஆடுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இரு அணிகளின் இணைப்பிற்கான பேச்சுவார்த்தைக்கு எந்தவகையிலும் பழனிச்சாமி ஒத்துவரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் இணைப்பில் இழுபறி வலுத்துள்ளது.