எங்க கூட சேரலைன்னா எடப்பாடி அரசு விரைவில் கவிழும்.. மாஃபா பாண்டியராஜன் வார்னிங்
அதிமுக இணைப்பில் இதே நிலைநீடித்தால் தமிழக அரசு கவிழும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் நீடித்து வந்தால் விரைவில் ஆட்சி கவிழும் என ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அந்த பிளவு சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், இணையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் தினகரன் சிறைக்கு சென்ற பின்னர், விரைவில் இரண்டு அணிகளும் விரைவில் இணைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
எனினும், இரு அணிகளும் மாறி மாறி குறை சொல்வதிலும், கிண்டல் செய்வதிலும் காலத்தைப் போக்கி வருகின்றன. இதனிடையே ஓபிஎஸ் அமைத்த அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
என்றாலும், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள சகோதரர்களுக்காக எப்போது கதவுகள் திறந்தே கிடக்கின்றன என்று கூறப்பட்டது. இதனிடையே கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த தினகரனும் இரு அணிகள் இணைப்பிற்கு காலகெடு விதித்துள்ளார்.
ஆனால், இந்த இரு அணிகளின் இணைப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இந்நிலையில், இன்று ஆவடியில் மாஃபா பாண்டியராஜன் எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாண்டியராஜன், அதிமுக அணிகள் இணைவதில் இதே நிலை நீடித்தால் தமிழக அரசு விரைவில் கவிழும் என கூறினார்.