நெல்லையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கிட்டப்பா... நீதிபதி விசாரணை தொடங்கியது
நெல்லை: நெல்லை அருகே பயங்கர ரவுடி கிட்டப்பா போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கரிசூலமங்கலம் கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டப்பா. அப்புகுதியில் பயங்கர ரவுடி. இல்லாத வழக்குகள் கிடையாது. செய்யாத சேட்டையும் இல்லை. கிட்டப்பா மீது 60 வழக்குகள் உள்ளனவாம்.
2009 ஆம் ஆண்டு ஆழ்வார்குறிச்சி பகுதியில் நடந்த 3 கொலைகளில் தொடர்பு உள்ளவர். மேலும், நெல்லையில் போலீஸ் பைக்குகளைத் திருடிய வழக்கிலும் சிக்கினார். சிவந்திப்பட்டியில் ஒரு போலீஸ்காரரை அரிவாளால் வெட்டியவர்.
சுத்தமல்லியில் உள்ள ஒருவீட்டில் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் சென்றனர். அப்போது கிட்டப்பாவும், கூட்டாளிகளும் போலீஸாரை அரிவாளால் தாக்க முயன்றதாகவும், தப்பி ஓட முயன்றதாகவும் போலீஸார் கூறுகிறார்கள். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கிட்டப்பட்டா பலியானார்.
இந்த விவகாரம் குறித்து தற்போது சேரன்மாதேவி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மாயகிருஷ்ணன் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளார். என்கவுண்டர் நடந்ததாக கூறப்படும் இடத்தை அவர் இன்று நேரில் போய்ப் பார்த்து விசாரணை நடத்தினார். அங்கு வசித்து வரும் பொது மக்களிடமும் அவர் விசாரணை நடத்தினார். இதையடுத்து அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர் அங்கு காயமடைந்ததாக கூறப்படும் போலீஸாரிடமும் விசாரணை நடத்தினார்.