ஜெ., நலமடைய 108 யாக குண்டங்கள்... 108 மூலிகைகளால் நடைபெற்ற மஹா மிருத்யுஞ்ச யாகம்...
முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி 108 யாக குண்டங்கள் அமைத்து 108 மூலிகைப் பொருட்களால் பிரம்மாண்ட வேள்வி சென்னையில் நடத்தப்பட்டது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி பிரம்மாண்ட மிருத்யுஞ்ச யாகம் நடைபெற்றது. ஜெயலலிதா பூரண நலமடைந்து நீடூழி வாழ வேண்டியும் வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 108 யாக குண்டங்கள் அமைத்து 108 மூலிகைப் பொருட்களால் பிரம்மாண்ட வேள்வி நடத்தப்பட்டது. 150க்கும் மேற்பட்ட வேத ஆகமம் பயின்ற சிவாச்சாரியார்களை கொண்டு லட்ச ஆவர்த்தி பூஜை நடைபெற்றது.
உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
36 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்களும் தொண்டர்களும் பல்வேறு வகையான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் தொகுதி பக்தவத்சலம் காலனியில் உள்ள அருள்மிகு பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் கோவில் வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு மஹா வேள்வி நடந்தது.
பிரம்மாண்ட யாகங்கள்
ஏக கால அஷ்டோதர மஹா அமிர்த மிருத்யுஞ்ச யாகம், மஹா கணபதி யாகம், சகல தோஷ நிவர்த்தி நவக்கிரக யாகம், மஹா ஆயுஷ் யாகம் ஆகியவை நடைபெற்றன. இந்த மண்டபத்தில் பெரிய ராட்சத குண்டம் ஒன்று அமைக்கப்பட்டது. அதனை சுற்றி ஏராளமான குருக்கள் அமர்ந்து யாகம் நடத்தினார்கள். இது தவிர மண்டபம் முழுவதும் வரிசையாக 107 குண்டங்கள் அமைக்கப்பட்டு அனைத்து யாகங்களும் நடைபெற்றன.
ஒரு லட்சம் வேத மந்திரங்கள்
108 யாக குண்டங்கள் அமைத்து மஹா வேள்வி நடந்தது. 150க்கும் மேற்பட்ட வேத ஆகமம் பயின்ற சிவாச்சாரியார்கள் ஒரு சேர வேத மந்திரங்களை ஓத லட்ச ஆவர்த்தி பூஜை நடந்தது. காஞ்சிபுரம், திருக்கடையூர், திருத்தணி உட்பட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து புகழ்பெற்ற குருக்கள் வந்து இந்த யாகத்தை நடத்தினார்கள்.
108 மூலிகைகளால் யாகம்
ராஜ்குருக்கள், கணேச குருக்கள், பரணி குருக்கள் தலைமையில் இந்த யாகம் 5 மணி நேரம் நடந்தது. மாலை 4 மணி அளவில் துவங்கிய இந்த யாகம் இரவு 9.30 மணிக்கு முடிவடைந்தது. யாகத்தில் 108 முலிகைகள், பழங்கள், பூக்கள் கூடை கூடையாக கொட்டப்பட்டன. இந்த வேள்வியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அனைவரும் அமர வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாகம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை அனைவரும் அமர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
அம்மாதான் கடவுள்
வேள்வியின் இறுதியில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் அம்மாவைக் கடவுள் போல வணங்குகிறோம். அவர் விரைவில் குணமடைய வேண்டி இந்த சிறப்பு யாகத்தை நடத்தி வருகிறோம். இதை முகஸ்துதி என்றோ, மூட நம்பிக்கை என்றோ சொல்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் வேடிக்கையானவை. எங்கள் நம்பிக்கைபடி, அம்மா விரைவில் மீண்டு வருவார் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இதுவரை ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்ட பூஜைகளிலேயே இந்த பூஜைதான், மிகப்பெரிய பூஜை ஆகும்.