மஹா சிவராத்திரி: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்.. கோவில்களில் சிறப்பு வழிபாடு!
மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்புபூஜைகள் நடைபெற்றன.
சென்னை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்புபூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவில்களின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நாளில் சிவன் வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.
பல பிராதான கோவில்களில் ,இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சென்னை
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோவில், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் மகா சிவராத்திரிக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரியையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். ராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
திருவண்ணாமலை
மஹா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் லட்சம் தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இக்கோயிலின் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில் வெள்ளி கவச அலங்காரம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
குஜராத்
சிவராத்திரியை முன்னிட்டு குஜராத் மாநிலத்தின் புகழ் பெற்ற சோம்நாத் கோவிலில் பக்தர்கள் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். வாரணாசியில் உள்ள காசிலிங்கநாதர் கோவிலில் வழிபட்ட பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினர். அங்கு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமான பேரணியும் நடைபெற்றது.
ஒடிஷா/ இலங்கை
ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் சிவாலயத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அண்டை நாடான இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீச்சர ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.