கும்பகோணம் மகாமகம்... புனித நீராட குவியும் பிரபலங்கள்: 24 மணிநேரமும் நீராட ஏற்பாடு
கும்பகோணம்: கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மகாமகப் பெருவிழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான மக்களுடன், பிரபலங்களும் குளத்தில் புனிதநீராடினர்.
கும்பகோணத்தையே தேசிய பக்தர்கள் மையமாக அறிவித்து, இந்த நகரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் மத்திய கலாசார மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் வலியுறுத்தப் போவதாக மகாமகம் குளத்தில் நீராடிய தருண் விஜய் கூறியுள்ளார்.
மகாமகப் பெருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மகாமகக் குளத்திலுள்ள தீர்த்தங்களில் புனிதநீராடினர். கும்பகோணம் மகாமகக் குளத்தில் 24 மணிநேரமும் புனித நீராட நகராட்சி நிர்வாகம் அனுமதித்துள்ளது. குளத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இரவை பகலாக்கும் விதமாக 400 எல்.இ.டி. விளக்குகள் கூடுதலாகப் பொருத்தி ஒளிரத் தொடங்கியுள்ளன.
பொன். ராதாகிருஷ்ணன்
மகாமகப் பெருவிழாவின் முதல் நாளன்று ஏராளமான பக்தர்களுடன் பிரபலங்களும் நீராடினர். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து மகாமகக் குளத்தில் இறங்கி, தலையில் நீரை தெளித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
டி.ராஜேந்தர்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தனது சகோதரர்களுடனும், மயிலாடுதுறை தொகுதி லோக்சபா உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன் உள்ளிட்ட பலரும் மகாமகக் குளத்தில் புனித நீராடினர்.
ரதசப்தமி நாளில் நீராடல்
விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே நீராட பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை ரதசப்தமி நாள் என்பதால், வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
|
குவிந்த கூட்டம்
சூரியனின் திதியான சப்தமியன்று சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி, குளங்களில் நீராடிச் செல்வது சிறப்பு என்பதால், மகாமகக் குளத்தில் நீராட அதிகாலையிலேயே மக்கள் குவிந்தனர். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் தலைக்கு மேலே வைத்து நீராடிச் சென்றனர். இவ்வாறு நீராடினால், நீண்ட ஆயுள், குறைவில்லா ஆரோக்கியம், நிலைத்த சுமங்கலி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நீராடும் பகுதியில் மாற்றம்
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நீராடுவதற்கு சில மாற்றம் செய்யப்பட்டது. மகாமகக் குளத்துக்கு செல்வதற்காக வடக்கு வாசல் சாலை வழியாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். கிழக்கு குளக்கரை பகுதியிலிருந்து குளத்தில் நீராட அனுமதிக்கப்படும் பக்தர்கள் நேரடியாக 20 தீர்த்தங்களிலும் நீராடி மேற்கு குளக்கரை வழியாக வெளியேறுவதற்கான வசதியை காவல்துறையினர் செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு பணியில்
மகாமக தெற்கு குளக்கரை மற்றும் வடக்கு குளக்கரை வழியாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த குளக்கரை வழியாக பக்தர்கள் குளத்துக்குள் செல்லாத வகையில் வரிசையாக தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. மகாமகக் குளத்தைச் சுற்றி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதுடன், குளத்தின் உள்பகுதியிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதியவர்கள் நீராடல்
20 தீர்த்தங்களுக்கும் பொதுமக்கள் வரிசையாக செல்வதற்காக குளத்தின் உள்பகுதியில் நீண்ட வரிசையில் தடுப்புக் கயிறு கட்டப்பட்டுள்ளது. உறவினர்கள், குடும்பத்தினர் பாட்டில் மற்றும் வாளிகளில் எடுத்து வந்த புனிதநீரைக் கொண்டு, குளக்கரையின் மேற்குப் பகுதிகளில் வைத்து வயதானவர்களையும், குழந்தைகளையும் புனிதநீராடச் செய்தனர். எனினும், சில மூதாட்டிகள் பிறரின் துணையோடு குளத்தில் நீராடிச் சென்றனர்.
இரவிலும் நீராடலாம்
கும்பகோணம் மகாமகக் குளத்தில் 24 மணிநேரமும் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட நேரம்தான் நீராட வேண்டும் என்ற வரையறை கிடையாது. குளத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இரவை பகலாக்கும் விதமாக 400 எல்.இ.டி. விளக்குகள் கூடுதலாகப் பொருத்தி ஒளிரத் தொடங்கியுள்ளதாக கும்பகோணம் நகராட்சி அதிகாரி ஜி. பிரகாஷ் கூறியுள்ளார்.
விடிய விடிய நீராடல்
காலையிலிருந்து பிற்பகல் வரை தொடர்ந்த பக்தர்கள் கூட்டம், பிற்பகலில் சற்று குறைந்து காணப்பட்டது. என்ற போதும், மாலையில் மீண்டும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. விடுமுறை நாள் என்பதால் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பொதுமக்கள், பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராடிச் சென்றனர்.
தருண் விஜய் எம்.பி
கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்த ராஜ்யசபா உறுப்பினர் தருண் விஜய்,
கும்பமேளா என்றால் அலகாபாத், நாசிக், ஹரித்வார், உஜ்ஜயினி போன்ற இடங்களைத்தான் குறிப்பிடுவர். கும்பகோணம் மகாமகக் குளம் புனிதமானதுதான் என்றார்.
தேசிய பக்தர்கள் மையம்
மகாமகக் குளம் மட்டுமல்லாமல், கும்பகோணத்தையே தேசிய பக்தர்கள் மையமாக அறிவித்து, இந்த நகரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் மத்திய கலாசார மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் வலியுறுத்தப் போவதாக கூறியுள்ளார்.
அதிகரித்த செல்பி…
மகாமகக் குளத்தில் பக்தர்கள் நீராடுவதை தங்களுடைய செல்போன்களில் புகைப்படம் எடுப்பதும், பலர் குளத்துடன் செல்பி எடுத்துக் கொள்வதுமாக இருந்தனர். குளத்தில் இரண்டரை அடி தண்ணீர் மட்டுமே இருந்தால் ஏராளமான சிறுவர்கள் உற்சாகமாக தண்ணீரில் துள்ளிக் குதித்து விளையாடி மகிழ்கின்றனர்.