கோலாகலமாக நடைபெற்ற தீர்த்தவாரி... மக்கள் வெள்ளத்தில் ‘கடலாக’ மாறிய குளம்... நிறைவுபெற்றது மகாமகம்!
கும்பகோணம்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பகோணம் மகாமக திருவிழாவின் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். கடந்த 10 நாட்களாக நடைபெற்ற மகாமக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது.
தென்னக கும்பமேளா என அழைக்கப்படும் கும்பகோணம் மகாமக விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குரு சிம்மராசியில் இருக்கும்போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.
கும்பகோணத்தில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது.
தீர்த்தவாரி:
இந்நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இந்த நாளில் மகாமக குளத்தில் புனித நீராடுவது, 12 கும்பமேளாவில் புனித நீராடியதற்கும், 108 ஆண்டுகள் காசியில் வாழ்ந்து கங்கையில் தினமும் நீராடியதற்கும் சமம் என்று கருதப்படுகிறது.
15 லட்சம் பக்தர்கள்:
எனவே மகாமக தீர்த்தவாரியில் பங்கேற்று புனித நீராடுவதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 மணி நேரமும்...
இந்த ஆண்டு முதல் முறையாக 24 மணி நேரமும் மகாமக குளத்தில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இரவு, பகல் வித்தியாசம் இல்லாமல் மகாமக குளம் எப்போதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.
மக்கள் வெள்ளம்...
நேற்று முன்தினம் வரை சுமார் 30 லட்சம் பக்தர்கள் மகாமக விழாவில் கலந்து கொண்டு புனித நீராடியிருந்தனர். தீர்த்தவாரி நாளான நேற்று மகாமக குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்தனர். இதனால் குளம் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.
மகாமகத்தின் சிறப்பு...
குளக்கரையில் 12 சிவக்கடவுள்களையும் ஒரு சேர பக்தர்கள் தரிசிப்பது மகாமக திருவிழாவின் போது மட்டும் தான் என்பது பெரும் சிறப்புக்குரியது ஆகும். மகாமக குளத்தின் படித்துறையில் அணிவகுத்து நின்ற சுவாமிகளுக்கு முதலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சப்பரத்தில் இருந்து சுவாமிகளின் அஸ்திர தேவர்களை இறக்கி படியில் வைத்து அபிஷேகங்கள் செய்யப்பட்டன. வேத மந்திரங்கள் ஒரு புறம் முழங்க, மேள-தாளங்கள் மற்றொருபுறம் இசைக்க சிறப்பான வகையில் ஒரே நேரத்தில் 4 கரைகளிலும் பூஜைகள் நடைபெற்றன.
புனித நீராடினர்...
சரியாக மதியம் 12 மணிக்கு மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி பிறந்ததால், குளத்தில் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தத்தை தங்கள் மீது வாரி இறைத்துக்கொண்டனர். பூஜைகள் முடிந்து அஸ்திர தேவர்கள் சரியாக மதியம் 12.35 மணிக்கு மகாமக குளத்தில் இறங்கினர்.
பச்சைக் கொடியை அசைத்து...
குறிப்பாக, வடமேற்கு கரையில் இருந்து ஆதிகும்பேஸ்வரரின் அஸ்திர தேவரை மகாமக குளத்துக்குள் இறக்கி நீராடல் நடந்தது. அப்போது, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் காமராஜ் பச்சை கொடியை அசைத்து, தீர்த்தவாரி நிகழ்ச்சியை பக்தர்களுக்கு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் உள்பட மற்ற சுவாமிகளுக்கும் தீர்த்தவாரி நடந்தது. பக்தி பரவசத்தோடு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் குளத்தில் நீராட தொடங்கினார்கள். குளத்தில் உள்ள 20 தீர்த்த கிணறுகளில் இருந்து தீர்த்தங்கள் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன.
கடலான குளம்...
அந்த நேரத்தில், மகாமக குளத்தில் பக்தர்களுடன் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகியோரும் புனித நீராடினார்கள். மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடியபோது, குளத்தை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனால், மகாமக குளப்பகுதியே மக்கள் கடலாக காட்சி அளித்தது.
பொற்றாமரைக் குளம்..
தீர்த்தவாரி முடிந்து கரை ஏறிய பக்தர்கள் ஆதிகும்பேஸ்வரரை வழிபட்டு பொற்றாமரை குளத்திலும் நீராடினர். பின்னர் காவிரி நதியில் குளித்து வைணவ தெய்வங்களை வழிபட்டனர்.
நிறைவு...
மகாமக குளத்தில் தீர்த்தவாரி முடிந்த பின்னர் ஆதிகும்பேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளினார். குளத்தில் புனித நீராடிய பக்தர்கள் கும்பேஸ்வரரை வழிபட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து தீர்த்தவாரிக்கு வந்த சுவாமிகள் கோவிலுக்கு திரும்பின. ஆதிகும்பேஸ்வரர் இரவு 9 மணி அளவில் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா சென்று கோவிலை சென்றடைந்தார். கடந்த 10 நாட்களாக நடைபெற்ற மகாமக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது.