மங்கள்யானின் என்ஜின் நெல்லை, மகேந்திரகிரியில் தயாரானவை
நெல்லை: செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திய ராக்கெட்டின் 2 என்ஜின்கள் நெல்லை மகேந்திரகிரியில் தயாரானவை என மகேந்திரகிரி திரவ இயக்க உந்து வளாக இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் திரவ இயக்க உந்து வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்ணில் செலுத்தும் ராக்கெட்டிற்கான உதிரி பாகங்கள் மற்றும் என்ஜின் தயாரிக்கப்படுவதுடன் என்ஜின் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றியில் மகேந்திரகிரிக்கும் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து மையத்தின் வளாக இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில்,
செவ்வாய் கிரகத்துக்குள் மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிக்கரமாக சென்றதில் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள மகேந்திரகிரியின் பங்கு மிக முக்கியமானது. மங்கள்யானை விண்ணில் செலுத்திய ராக்கெட்டில் பொருத்தப்பட்ட 9 என்ஜின்களும், 480 கிலோ திரவ எரிபொருளும் மகேந்திரகிரியில் தயாரானவை. மகேந்திரகிரியில் தரம் சரிபார்த்து பலகட்ட சோதனை செய்யப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ராக்கெட்டின் 2வது, 4வது நிலைகளில் உள்ள திரவ எரிபொருள் ராக்கெட்டின் என்ஜின் முழுவதும் மகேந்திரகிரியில் இந்திய தொழில்நுட்பத்தில் தயார் செய்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு பொருத்தி அனுப்பப்பட்டது. மங்கள்யான் செயற்கைக்கோளை இறுதியாக செவ்வாயின் புவிவட்ட பாதையில் செலுத்த பயன்படுத்திய என்ஜின் முழுக்க முழுக்க மகேந்திரகிரியில் வடிவமைக்கப்பட்டது. செவ்வாய்கிரகத்தை மங்கள்யான் ஒரு முறை சுற்றி வருவதற்கான நேரம் 72 மணி 51 நிமிடம் 51 வினாடிகள் ஆகும். தற்போது மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டு தெளிவான படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. மங்கள்யான் வெற்றியில் மகேந்திரகிரி திரவ திட்ட வளாகத்தின் பங்களிப்பில் நாங்கள் பெரிமுதம் கொள்கிறோம் என்றார்.