பணமில்லை, நிலமும் இல்லை.. சேலம் 8 வழிச்சாலையை 6 வழியாக மாற்ற முடிவு.. நெடுஞ்சாலை ஆணையம் பரபரப்பு!
சேலம் - சென்னை 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரபரப்பு அறிக்கை அளித்துள்ளது.
Recommended Video
சென்னை: சேலம் - சென்னை 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரபரப்பு அறிக்கை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் பசுமை வழி சாலை என்ற பெயரில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை போடப்பட உள்ளது. திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது.
இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
6 வழி சாலை
சேலம் - சென்னை 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரபரப்பு அறிக்கை அளித்துள்ளது. அதன்படி இப்போது சாலை முழுக்க 6 வழி சாலையாக போடப்படும். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் 8 வழி சாலையாக மாற்றப்படும். 8 வழி சாலைக்கு இப்போதைக்கு அவசியம் இல்லை என்றுள்ளது.
அகலம் குறைப்பு
இந்த நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில், இந்த சாலையின் அகலம் குறைக்கப்பட உள்ளது. அதன்படி 90 மீட்டர் அகலத்திற்கு சாலை போடத்தான் முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது திட்டமானது தற்போது 70 மீட்டர் அகல சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்களை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல்
முதலில் இந்த திட்டத்திற்காக 2560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தபட இருந்தது. ஆனால் அதிலும் தற்போது பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது திட்டத்தில் கையகப்படுத்தப்பட வேண்டிய நிலம் 1900 ஹெக்டேராக குறைக்கப்பட்டுள்ளது. 300 ஏக்கரில் வனப்பகுதியில் 300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும்.
காடுகள் பாதிப்பு
இந்த நிலையில் காடுகள் இதனால் பாதிக்க கூடாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி கல்வராயன் மலை பாதிக்காதபடி செங்கம் வழியாக சாலை மாற்றம் செய்யப்பட ஏதுவாக திட்டத்தை மாற்றியுள்ளது. மேலும் இதனைதொடர்ந்து வனப்பகுதியில் 13.2 கிலோ மீட்டருக்கு சாலை போடப்பட இருந்தது. அதற்கு பதில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே சாலை போடப்பட உள்ளது. அதேபோல் அங்கு அகலம் 50 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
சாலை வழி
இதற்காக புதிய சாலை வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது. செங்கம் தொடங்கி மூங்கில்கோட்டை வழியாக தர்மபுரி சென்று அங்கிருந்து சேலம் செல்லும் 163 கி.மீ கொண்ட வழி. செங்கம் தொடங்கி அரூர் வழியாக தர்மபுரி சென்று அங்கிருந்து சேலம் செல்லும் 154 கி.மீ வழி மற்றும் செங்கம் தொடங்கி அரூர் வழியாக தீவுட்டிபட்டி சென்று அங்கிருந்து சேலம் செல்லும் 121 கி.மீ ஆகியவவை உருவாக்கப்பட்டுள்ளது.
செலவிலும் மாற்றம்
அதேபோல் அங்கு எட்டு வழி சாலை போட பணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. முதலில் இந்த திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆராய்ச்சி பணி, திட்டமிடுதலுக்கே 2790 கோடி ரூபாய் செலவாகிவிட்டது. இதனால் மீதமுள்ள 7,210 கோடி ரூபாயில் மட்டுமே சாலை அமைக்க முடியும். அதில் 6 வழி சாலை மட்டுமே அமைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.