தமிழக காவலர் தேர்விலும் 1,000 பேர் முறைகேடு? போலி ஆவணங்கள் மூலம் சேர்க்கப்பட்டதாக புகார்
சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வையாணையமான டி.என்.பி.எஸ்.சி-யில் நடைபெற்ற முறைகேடுகளைப் போல காவலர் தேர்விலும் 1,000-க்கும் அதிகமானோர் போலி ஆவணங்கள் மூலம் சேர்க்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இம்முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பிலும் ஏராளமான சீர்திருத்தங்கள் கொண்டு வந்தால் மட்டுமே இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள். இந்நிலையில் தமிழக காவலர் தேர்விலும் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்தேர்வுகளில் முறையான உடற்கல்வி தகுதி, விளையாட்டு பிரிவு தகுதிக்கான சான்றிதழ்கள் வைத்திருந்த 1,000க்கும் மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்படவில்லையாம். இவர்களுக்குப் பதில் போலி ஆவணங்கள் மூலம் 1,000க்கும் அதிகமானோர் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.