தூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைப்பு : தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவிப்பு
தூத்துக்குடியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி உள்ளது.
தூத்துகுடி: குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடி தண்ணீர் வீணாகி கடலில் கலந்ததால் தூத்துக்குடி பொது மக்கள் தவிப்பில் உள்ளனர்.
தூத்துக்குடி நகரில் மாநகராட்சி சார்பில் பைப்லைன் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ராஜாஜி பூங்கா நீரேற்று நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வழியாக அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ராட்சத பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பைப்லைன் தூத்துக்குடி கே.வி.கே நகர் வழியாக சென்று ரயில்வே லைன் கீழ் பகுதி வழியாக நீரேற்று மையத்திற்கு செல்கிறது. இந்நிலையில் நேற்று மாலை கே.வி.கே நகர் செல்லும் வழியில் உள்ள ராட்சத பைப்லைனில் திடீரென விரிசல் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு உருவானது.
தண்ணீர் பல அடி மேலே எழுந்ததால் அந்தப் பகுதியில் இருந்த குடிசைகள் காற்றில் பறந்தன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த எம்.எல்.ஏ கீதா ஜூவன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு நீரேற்று மையத்தில் இருந்து வரும் நீரை நிறுத்தும்படி உத்தரவிட்டார். உடைப்பை சரி செய்யும் பணி இன்று அதிகாலை வரை நீடித்து வருவதால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர்.