கொள்ளையோடு கொலையும்... தோண்டத் தோண்ட எலும்புகள்... மதுரைக்கு வந்த சோதனை!
மதுரை: தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் குவாரி கொள்ளை வழக்கில் தற்போது நரபலி விவகாரம் சேர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து முறைகேடு செய்ததாக பிஆர்பி நிறுவனத்தின் மீது புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் கடந்த 1999ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள அவர், தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இன்னும் ஒரு வார காலத்தில் இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
நரபலி புகார்...
இதற்கிடையே, பிஆர்பி நிறுவனத்தில் 1999ம் ஆண்டு முதல் 2003 வரை டிரைவராக பணியாற்றிய சேவற்கொடியான் என்பவர் சகாயத்திடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், பிஆர்பி நிறுவனம் 12 பேரை நரபலி கொடுத்ததாகவும், உண்மையை வெளியில் சொன்னால் தன்னைக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தோண்டும் பணி...
அந்த புகாரின் அடிப்படையில் சகாயம் குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதன்படி, மதுரை மாவட்டம் சின்னமலம்பட்டியில், சேவற்கொடியான் அடையாளம் காட்டிய மணிமுத்தாறு மயானத்தில் நரபலி கொடுக்கப்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் தோண்டும் பணி நடந்து வருகிறது.
மனிதர்களைக் கொண்டு...
இன்று காலை 9 மணியளவில் இந்தப் பணி தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட உடல்கள் என்பதால் இயந்திரங்களைக் கொண்டு தோண்டாமல், மனிதர்களைக் கொண்டு தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஆறு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
5 குழுக்கள்...
தோண்டும் பணியினை சகாயத்தின் விசாரணைக்குழு, காவல்துறை, தடயவியல் துறை, மருத்துவத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட ஐந்து குழுக்கள் கண்காணித்து வருகின்றன. விசாரணை அதிகாரி சகாயம் தலைமையில் , முன்னாள் ஏ.டி.எஸ்.பி., வேலு, தனி உதவியாளர் ஆல்பர்ட், விசாரணைக்குழு அலுவலர் ராஜாராம், வருவாய்துறை அலுவலர் செந்தில்குமாரி, முது நிலை விஞ்ஞானி தேவசேனாதிபதி, ஏ.டி. எஸ்.பி , மாரியப்பன் டி. எஸ். பி., மங்கலேஸ்வரன், வருவாய் துறை தாசில்தார் கிருஷ்ணன், கனிம வளத்துறை உதவி அலுவலர் ஆறுமுக நயினார், தடயவியல் நிபுணர்கள், மருத்துவ , வருவாய் குழுவினர் மயானத்தில் முகாமிட்டுள்ளனர்.
அதிக ஆழத்தில்...
நரபலி கொடுக்கப்பட்ட உடல்கள் இயந்திரங்கள் உதவியோடு புதைக்கப்பட்டதாக சேவற்கொடியான் கூறியிருப்பதால், அதிக ஆழத்திலேயே அந்த உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மயானம்...
மேலும், தற்போது இந்த இடம் மயானமாக உள்ளதால், அங்கு மேலும் பலரது உடல்கள் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, தீவிர தடயவியல் சோதனைக்குப் பிறகே மீட்கப்படும் எலும்புக் கூடுகள் நரபலி கொடுக்கப்பட்டவர்களுடையதுதானா என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீதி உடல்கள் எங்கே...?
அதோடு, தற்போது சேவற்கொடியான் அடையாளம் காட்டிய பகுதியில் இருவரது உடல்கள் மட்டுமே புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியானால், மீதம் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடிக்கும் பணியும் போலீசாருக்கு உள்ளது.
அடையாளம் காண்பதில் சிக்கல்...
அதோடு, நரபலி தரப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களைப் பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, கிடைக்கும் எலும்புகளைக் கொண்டு, நரபலி கொடுக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.