மணல் குவாரியில் பணத்தை அள்ள ஐடியா கொடுத்தவரே ராம மோகன் ராவ்தானாம்!
மணல் குவாரிகள் மூலம் கோடிக் கணக்கில் பணத்தைக் குவிக்கலாம் என்று ஐடியா கொடுத்தவரே ராம மோகன் ராவ் தான் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை இன்று காலை 6 மணியளவில் தொடங்கியது. சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் வீடு மற்றும் அவரது உறவினர், நண்பர்களின் வீடுகள் என 10 வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, ராம மோகன் ராவ் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை அள்ளலாம் என்று ஐடியா கொடுத்தவர் ராம மோகன் ராவ் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
1990ம் ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியாளராக ராம மோகன் ராவ் இருந்தார். அப்போது, மணல் எடுக்க அனுமதி கொடுப்பதன் மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெறலாம் என மற்ற ஆட்சியாளர்களுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார் ராம மோகன ராவ். இவர் உருவாக்கி தந்த இந்தத் திட்டம் மூலமே மணல் குவாரிகளை அரசு ஏற்றது.
மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்த இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்த ராம மோகன் ராவுக்கும் சேகர் ரெட்டிக்கும் இருக்கும் நெருக்கமான உறவு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.