ஆபாசப் படம் காட்டி சிறார்களுக்கு பாலியல் கொடுமை.. சினிமா மேக்கப் உதவியாளர் கைது
சென்னை: அக்கம் பக்கம் வசிக்கும் சிறுவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி, அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக ஜாகீர் ஹுசைன் (32) என்பவரை வடபழனி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தமிழ் சினிமாவில் மேக்கப் உதவியாளராக விளங்கும் ஜாஹிர் ஹுசைன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லைகளை அளித்து வந்தது, தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் வெளியே தெரியவந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கோடம்பாக்கம் பகுதியில் வசித்துவந்த ஜாஹிர் ஹுசைன் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த சிறுவர்களை ஆபாச வீடியோக்களை காட்டி அவ்வப்போது தொடர்ந்து துன்புறுத்தி வந்திருக்கிறார். (ஜாஹிரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனைவருமே 12-16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
சில நாட்களுக்கு முன்னர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று சிறுவர்களுக்கு ஆலோசனை அளிப்பதற்காக, கோடம்பாக்கம் பகுதிக்கு வந்து சிறுவர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஜாஹீரைப் பற்றி சொல்ல, தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் இந்த வழக்கு வடபழனி காவல் நிலையத்தில் பதிவானது.
வழக்கை எடுத்துக் கொண்ட வடபழனி போலீசார் ஜாஹீரைப் பொறிவைத்து பிடித்துள்ளனர், அவர் மீது குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தொடர்பாக போஸ்கோ என்ற கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் ஜாகிர் தனது குடும்பத்தினரை விட்டு தனியாக வீடு எடுத்து வசிப்பது தெரிய வந்துள்ளது, ஜாஹீரின் பழக்க வழக்கங்கள் காரணமாக குடும்பத்தினர் அவரை வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்து உள்ளனர்.
தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிறுவர்களுக்கு மொபைல் போனில் கேம்ஸ் விளையாடக் கொடுத்த ஜாஹீர், நாளடைவில் தனது போனில் இருந்து ஆபாச வீடியோக்களை அந்த சிறுவர்களுக்கு காட்டியுள்ளார். மேலும் அவர்களை தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடச் சொல்லியும் வற்புறுத்தியுள்ளார்.
ஆபாச வீடியோக்கள் பார்த்ததை உனது பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று தனது கோரிக்கைக்கு இணங்காத சிறுவர்களை, ஜாஹீர் மிரட்டியும் இருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுவர்கள் வேறு வழியின்றி ஜாஹீரின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளனர்.
ஏற்கனவே இதேபோன்று 10 சிறுவர்களை தேர்ந்தெடுத்து ஜாஹீர் மிரட்டியபோது அந்த சிறுவர்கள் ஏரியாவில் உள்ள இளைஞர்களிடம் கூற அவர்கள் வந்து இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ஜாஹீரை எச்சரித்து இருக்கின்றனர்.
அந்த இளைஞர்கள் எச்சரித்துச் சென்ற சில தினங்களிலேயே எதையும் பொருட்படுத்தாமல் ஜாஹீர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும், சிறுவர்களை மிரட்டி அவர்களைத் தனது ஆசைக்கு பயன்படுத்தி இருக்கிறார்.
கோடம்பாக்கம் பகுதிக்கு ஆலோசனை அளிக்கச் சென்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் எதேச்சையாக இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைதான ஜாஹீர் வீட்டில் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
கைதான ஜாஹீரிடம் வடபழனி போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.