டாஸ்மாக்கை மூடு... "மக்கள் அதிகாரம்" போராட்டம்... போலீஸ் தடியடி... பெண்கள் காயம்
சென்னை: டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மதுரவாயலில் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை வரும் 4-ம் தேதிக்குள் மூட வேண்டும் என வலியுறுத்தி அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியரிடம் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் மனு அளித்திருந்தன. டாஸ்மாக் கடைகளை மூடாமல் தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என்பது அவர்களது வாதம்.
ஆனால், மக்கள் அதிகாரம் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. இதனால், இன்று அந்த அமைப்பினர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் மதுரவாயல் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர். பெண்களின் மண்டை உடைந்தது. போலீசாரின் தாக்குதலில் சிறுவன் ஒருவன் மயக்கமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசாருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் என்றும் பாராமல், தலைமுடி, உடையைப் பிடித்து இழுத்து போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையைப் போலவே, கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் குவிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர், அங்குள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டயமாக கைது செய்தனர்.
இதேபோல், கோவில்பட்டியில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.
பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பினரே பூட்டுப் போட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி உட்பட பல்வேறு இடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.