ஸ்டாலினை சந்தித்தார் மக்கள் தேமுதிகவின் சந்திரகுமார்: இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு ?
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் இன்று மாலை சந்தித்து பேசினார். மக்கள் தேமுதிக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் தேமுதிவில் கலகக்குரல் வெடித்தது.
மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததற்கு, தேமுதிக கொள்கை பரப்பு செயலராகச் செயல்பட்டு வந்த வி.சி.சந்திரகுமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை கட்சியிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீக்கினார்.
இந்த நிலையில் தேமுதிக அதிருப்தியாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சந்திரகுமார் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், 4 மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பின்னர் "மக்கள் தேமுதிக' எனும் புதிய அமைப்பை உருவாக்குவதாக சந்திரகுமார் நேற்று அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், தேமுதிகவை உடைக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. இப்போதுகூட திமுகவுடன் கூட்டணி அமைக்கிறோம் என்று விஜயகாந்த் கூறினால், அவரது காலில் விழுந்துகூட மன்னிப்பு கேட்டு, அரசியலில் இருந்தே விலகிவிடுகிறோம்.
திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் அழைப்பு விடுத்தால், கூட்டணி அமைக்கத் தயார் என்று கூறினார்.
இன்று கோபாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் தேமுதிகவினர் வந்தால் திமுக தலைவர் கருணாநிதி சந்திப்பார் என்று கூறினார்.
இதனையடுத்து இன்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார், தேமுதிகவில் இருந்து விலகிய பார்த்தீபன், சி.எச்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயித்தில் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் மக்கள் தேமுதிக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.