தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரே வெளியேறு!... சென்னையில் சங்கர மடம் முற்றுகை!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத இளைய மடாதிபதி விஜயேந்திரர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் சென்னையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : சங்கர மடத்தை மூட வேண்டும், சொத்துகளை முடக்கி அரசுடைமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேத்துபட்டில் உள்ள சங்கர மட இடத்தை மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் தமிழகத்தை விட்டே வெளியேற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரரின் செயலுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு சொந்தமான இடத்தை மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைய மடாதிபதி விஜயேந்திரரின் படத்தை பெண்கள் செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம்
யாரும் பேசாத செத்துப்போன சமஸ்கிருத மொழியை சங்கட மடம் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. அந்த ஆரிய மொழிகளுக்கு சவால்விட்டு தனி இலக்கியம் மூலம் தலை தூக்கி நிற்கிறது தமிழ் மொழி.
தமிழ் மொழியை அழிக்கும் நோக்கம்
தமிழ் மொழியை அழிக்கும் நோக்கத்தின் வெளிப்பாடாகவே தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த போது விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை. தியானம் செய்பவர் ஒரு அறைக்குள் செய்ய வேண்டும், பொது மேடையில் வந்து ஏன் தியானம் செய்தார்.
மடத்தை மூட வேண்டும்
விஜயேந்திரர் செய்தது தியானம் அல்ல நீசப்பாஷையான தமிழை என் காதால் கேட்கக் கூடாது என்று கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். தமிழனின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் தமிழகத்தை விட்டே வெளியேற வேண்டும். சங்கர மடத்தை இழுத்து மூட வேண்டும், அதன் சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க வேண்டும் என்று போராட்டத்தை முன் எடுத்த மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
போராட்டம் தொடரும் என எச்சரிக்கை
தடையை மீறி பேரணியாக வந்து சேத்துபட்டு சங்கரை மடத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். எனினும் தமிழகம் முழுவதும் சங்கர மடத்திற்கும், விஜயேந்திரருக்கும் எதிரான போராட்டங்கள் தொடரும் என்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.