நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ம.நீ.ம. போட்டி...? நிர்வாகிகளிடம் கமல் ஆலோசனை
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது பற்றி கமல் யோசித்து வருகிறார்.
நகர்ப்புறங்களை பொறுத்தவரை படித்த விவரம் தெரிந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய பகுதி என்பதால், மக்கள் நீதி மய்யத்துக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பது அந்தக் கட்சி நிர்வாகிகளின் நம்பிக்கை.
இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கட்சியின் பலத்தை தெரிந்துகொள்வது பற்றி கமலும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
புறக்கணிப்பு
கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், அந்த தேர்தலை புறக்கணித்தது மக்கள் நீதி மய்யம். சட்டமன்ற தேர்தலே தமது இலக்கு என அறிக்கைவிட்ட கமல் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
ஆலோசனை
இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது பற்றி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசித்தாராம். இதன் மூலம் கட்சியின் வாக்கு வங்கி, மற்றும் பலம் நகரங்களில் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என நிர்வாகிகள் கூறுகிறார்களாம்.
யோசனை
ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் அது சரியாக இருக்காது என்றும், விமர்சனத்திற்கு வழி வகுக்கும் எனவும் கமல் முதலில் நினைக்கிறாராம். ஆனால் அவரை சுற்றி உள்ள ஒரு சில நிர்வாகிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதன் அவசியத்தை எடுத்துக் கூறிய பிறகு பரிசீலிக்க தொடங்கியுள்ளார்.
திமுக, அதிமுக
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் டஃப் கொடுக்கலாம் என்பது மக்கள் நீதி மய்யம் முன்னணி நிர்வாகிகளின் எண்ணம். ஆனால் இது குறித்து கமல் இன்னும் உறுதியாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.