திருமாவளவன் அமைதி.. ஸ்டாலினும் எதுவும் சொல்லவில்லை.. ஆர்.எஸ் பாரதி கருத்தால் பாய்ந்த மநீம!
சென்னை: இடஒதுக்கீடு குறித்தும், தலித் மக்கள் குறித்து திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர், ஆர்.எஸ் பாரதி நேற்று ஊடகங்கள் குறித்தும், பிராமணர்கள் குறித்தும் பேசியது பெரிய சர்ச்சையானது. ஆர்.எஸ் பாரதி தனது பேச்சில், இடஒதுக்கீடு என்பது தலித்துக்கு திமுக போட்ட பிச்சை. நாங்கள் போட்ட பிச்சையால்தான் அவர்கள் முன்னேறினார்கள். ஊடகத்தினர் தவறான தொழில் செய்கிறார்கள்.
வடஇந்தியர்கள் எல்லோரும் முட்டாள்கள், என்பது தொடங்கி பலரை மிக கடுமையான வார்த்தைகளால் ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் பேச்சுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
எதிர்ப்பு
ஆர்.எஸ் பாரதியின் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது. தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியும், திமுக எம்பியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதி திராவிட நலப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எம்பி பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தலித் மக்கள் பெற்ற உரிமை என்பது அம்பேத்கார் மூலம் கிடைத்தது.
எப்படி கிடைத்தது
தலித் மக்கள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட அனைத்து விதமான மக்களும் அம்பேத்கார் மூலம்தான் பலன் அடைந்தார்கள். வர்ணாசிர்ம கொள்கை மூலமா ஒடுக்கப்பட்ட எல்லோரையும் அம்பேத்கார்தான் வெளியே கொண்டு வந்தார். தமிழகத்தை 50 வருடமாக ஆண்ட எந்த கட்சியும், அம்பேத்கார் செய்த சாதனைக்கு உரிமை கோர முடியாது. திமுக எம்பி பேசியது முழுக்க முழுக்க தவறு.
அரசியல் எப்படி
அவர்களின் தாழ்ந்த அரசியலைத்தான் இது காட்டுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், ஆர். எஸ் பாரதியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை. அவரின் அமைதி வருத்தம் அளிக்கிறது. ஆர் . எஸ் பாரதி இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. வருத்தம் மட்டும் கேட்டு இருக்கிறார். இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வெளிப்படையாக, இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
விசிக
அண்ணா போன்ற நபர்களால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் திமுக. ஆனால் அப்படிப்பட்ட இயக்கம் இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விசிக கூட இதை பற்றி பேசவில்லை. விசிக தலைவர் எம்பி திருமாவளவன் கூட இதை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுக, விசிக ஆகியோரின் முகத்தை தமிழக மக்கள் மொத்தமாக தெரிந்து கொள்ள வேண்டும், என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.