டாஸ்மாக் கடைகளைக் குறைப்பதற்கான வரைவுத்திட்டம் தமிழக அரசிடம் இருக்கிறதா ?: மக்கள் நீதி மய்யம் கேள்வி
டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என்று மக்கள் நீதி மய்யம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : டாஸ்மாக் மதுக்கடைகள் குறைப்பதற்கான திட்ட வரைவு அறிக்கை ஏதாவது தமிழக அரசிடம் உள்ளதா என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டசபையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளது.
|
தொடர் கேள்விகள்
ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில், கேள்விகள் கேட்பதற்கு சட்டமன்றத்தின் உள்ளே எதிர்க்கட்சி இல்லை என்ற மெத்தனத்துடன் ஆளுங்கட்சி இருந்திட வேண்டாம். மக்கள் நீதி மய்யம், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஊழல் குற்றச்சாட்டு
அதன்படி, எரிசக்தித்துறையில் 3000 கோடி நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை விசாரிக்க ஏன் துறை ரீதியான ஆணையம் அமைக்கப்படவில்லை என்றும், மின் தொகை அதிகரித்து இருப்பதற்கான காரணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பயோ மாஸ் எரிசக்தி
கடந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதைப் போல, 500 மெகாவாட் சூரிய ஒளிப்பூங்கா அமைக்கப்பட்டு எத்தனை மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது , காற்றாலை மின் உற்பத்தி ஏன் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுவது இல்லை, பயோ மாஸ் எரிசக்திக்கு மானியம் வழங்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
மேலும், தமிழகத்தில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை என்ன, மீதம் இருக்கும் கடைகளைக் குறைக்க அரசு எந்த மாதிரியான திட்ட வரைவு அறிக்கை வைத்துள்ளது,உச்ச நீதிமன்றத்தின் தடையை அகற்ற முயற்சித்த அரசு ஏன் கடைகளை மூடுவதில் ஈடுபாடு காட்டவில்லை, ஒழுங்கு முறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.