சட்டசபையில் கால்நடை மானியக் கோரிக்கை.. கேள்விகளை அடுக்கும் மக்கள் நீதி மய்யம்
தமிழக சட்டசபையில் நடக்க உள்ள கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மற்றும் பால் வளத்துறை மீதான மானியக்கோரிக்கை குறித்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழக சட்டசபையில் நடக்க உள்ள கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மற்றும் பால் வளத்துறை மீதான மானியக்கோரிக்கை குறித்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இது இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும். மே 29ம் தேதி இந்த கூட்டம் தொடங்கிய சட்டசபை கூட்டம் ஜூலை 9ம் தேதிவரை நடக்கிறது.
சட்டசபை கூட்டத்தொடர் குறித்து இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், 01-06-2018 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மற்றும் பால் வளத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடக்க உள்ளது. அது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கேள்விகள் பின்வருமாறு.
கால்நடைத்துறை :
1. கால்நடை மருத்துவர்களுக்கான பணியிடங்களில், ஏறக்குறைய 35% பணியாளர்கள் இன்னும் பணி அமர்த்தப்படவில்லை என்ற நிலை இருக்கின்றது. 2011ம் ஆண்டிற்கு பிறகு கால்நடை உதவி மருத்துவர் தேர்வு நடைபெறவில்லை. இதனால் கால்நடை சுகாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு இதன் தீர்வாக அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன?
2. இலவச கறவை மாடுகள் திட்டத்திற்காக சமவெளி நிலங்களில் இருந்து வருடந்தோறும் ஏறக்குறைய 1.25 லட்சம் மாடுகள் வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே சொந்தமாக கன்றுகளை
உற்பத்தி செய்தால் 30-40% செலவை குறைக்க முடியும் என்று கணிக்கப்படுகிறது. இனியாவது அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமா?
பால் வளத்துறை:
3. மாட்டுத் தீவன விடை ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், பாலின் கொள்முதல் விடை இன்னும் ஏன் உயர்த்தப்படவில்லை? இதனால் பால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். பாலின் கொள்முதல் விலையை அதிகப்படுத்த அரசின் திட்டம் என்ன?
4. தமிழகத்தில் மொத்தமாக 1.50 கோடி லிட்டர் பால் தினமும் விநியோகிக்கப்படுகிறது, அதில் 83.4%, அதாவது 1.25 கோடி லிட்டர் பால் தனியார் நிறுவனங்களுக்கு விநிதயாகிக்கப்படுகிறது. அரசு பால்வளத்துறையின் ஆவின் பால் விற்பனையை ஏன் இன்னும் உயர்த்த முடியவில்லை?
5. பால் வணிகம் என்ற அத்தியாவசிய சேவையில், பால் உற்பத்தியாளர்கள்/பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஏறக்குறைய 30 லட்சம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கென "நலவாரியம்" அமைப்பதற்கு அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
மீன்வளத்துறை:
6. ஒக்கி புயலில் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை, மொதத சேதார மதிப்பீடு, வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த வெள்ளை அறிக்கை வழங்கப்படுமா?
7. கடந்த 2017-2018 பட்டேஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த சில முக்கிய அறிவிப்புகளின்
தற்போதையை நிலை என்ன?
a. நாகப்பட்டினம் மாவட்டத்தின் 10 கிராமங்களில் 89 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நபார்டு நிதி உதவியுடன் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுவிட்டனவா?
b. பாரம்பரிய மீன்பிடி படகுகளை நாரிழைப் படகுகளாக மாற்றுவதற்கு 2 கோடியே 12 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுவிட்டனவா? மொத்தம் எத்தனை நாரிழைப் படகுகள் வாங்கப்பட்டிருக்கிறது?
8. மீன் பிடிக்க தடை இருக்கும் மாதங்களில் மீனவர்களுக்கான உதவிதொகையை உயர்த்துவதற்கான கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவு செய்துவிட்டதா?