அரசு கேபிளில் மக்கள் தொலைக்காட்சி: ஒளிபரப்பு நிறுத்தத்தை எதிர்த்து வழக்கு
சென்னை: அரசு கேபிளில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மக்கள் தொலைதொடர்பு குழுமம் நிறுவனத்தின் இயக்குநர் வி.தனசேகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
எங்கள் குழுமத்தின் கீழ் "மக்கள் டிவி' என்ற பெயரில் சேனல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு எங்கள் சேனல் தொடங்கப்பட்டு, இலவசமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் சேவை அளிப்பதற்காக தமிழக அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கியது. அப்போது முதல் 2011-ஆம் ஆண்டு வரை நிறுவனம் சரியாகச் செயல்படவில்லை. அதன் பிறகு புதுப்பிக்கப்பட்டு, தற்போது 100 சேனல்கள் வரை அரசு கேபிளில் ஒளிபரப்பப்படுகிறன.
அரசு கேபிளில் மூன்று வகையான பிரிவுகளில் சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதில், எங்களது சேனல் இரண்டாவது பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி அரசு கேபிளில் எங்கள் சேனல் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டது.
இதற்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் சேனல் ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இதர 38 இலவச சேனல்கள் ஏதும் ஒளிபரப்பாவது நிறுத்தப்படவில்லை. எனவே, எங்கள் சேனலை மீண்டும் அரசு கேபிளில் ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தேரஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் ஆஜராகினர். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இடைக்கால கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.