ஓணம் பண்டிகை: தமிழகத்தில் மலையாள மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
சென்னை: தமிழகத்தில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை, கோவை, திருப்பூர், குமரி மாவட்டங்களில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் பாரம்பரிய ஆடை உடுத்தி ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலத்தினால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபட்டனர்.
மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். அதேபோல ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலிலும் ஓணம் சிறப்பு ஆராதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அத்தப்பூ கோலம்
வீடுகளிலும், கோவில்களிலும் அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி படையலிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து வந்த மலையாள மக்கள் ஓணம் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொண்டனர்.
கோவையில் பண்டிகை
கேரள எல்லையோர மாவட்டமான கோவையில் மலையாள மொழி பேசும் மக்கள் உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் இன்று காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூரில் கொண்டாட்டம்
இதே போல், திருப்பூர் மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் தங்களின் வீடுகளை அலங்கரித்து தங்களை காணவரும் மகாபலி மன்னனை வரவேற்க விருந்துகளுடன் காத்திருக்கின்றனர்.
குமரி மாவட்ட மக்கள்
கேரளாவில் எல்லையில் அமைந்துள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. இங்குள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
உலகெங்கிலும் மலையாள மக்கள்
திருவோணம் நன்னாள் இன்று உலகெங்கிலும் உள்ள மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது. பத்துநாள் கொண்டாடப்படும் திருவோண திருநாள் தொடங்கியதுமே கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் படகு போட்டிகள் அதிகமாக நடக்கும். காயலும், கடலும் சேரும் இடங்களிலும், அஷ்டமுடி காயலிலும், நீளமான நதிகளிலும் இந்த போட்டிகள் நடைபெறும்.
நடனங்கள்
இதுபோல வடம் இழுத்தல், புலியாட்டம், களரி, கதகளி நடனம், திருவாதிரை பாடல் போட்டிகள் நடைபெறும். இதில் ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.