தூத்துக்குடியில் அனுமதியின்றி மலேசிய மணலை கடத்தியதாக லாரிகளை மடக்கிய அதிகாரிகள்!
தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மலேசிய மணலை அனுமதியில்லாமல் கடத்திய லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து பறிமுதல் செய்த சம்பவம் அங்கு பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மணல் குவாரிகள் மூடப்பட்டதால் மணல் விலை கடுமையாக அதிகரித்து உள்ளது. இதனால் தமிழகமெங்கும் மணல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மணல் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் முழுவதும் முடங்கி உள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணலை பயன்படுத்தி சிலர் கட்டுமானப் பணிகளை செய்து வருகின்றனர். இருப்பினும் பூச்சுமான வேலைகளுக்கு சிலர் ஆற்று மணலையே பயனப்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு யூனிட் மணல் விலை ரூபாய் 50 ஆயிரத்தை எட்டி உள்ளது.
இதற்கிடையை புதுக்கோட்டையை சேர்ந்த நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முயன்றபோது அதனை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான டன் மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை மணல் குவாரிகளை மூட உத்தரவு பிறப்பித்தது ஆனால் மலேசிய மணலை விற்பனை செய்ய தடை ஏதும் பிறப்பிக்கவில்லை. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் மீண்டும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் துறைமுகம் பைபாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டராஸ் லாரி இரண்டை சோதனையிட்டபோது மலேசிய மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து மலேசிய மணலுக்கு அனுமதி கிடையாது என்று கூறி அந்த இரண்டு லாரிகளையும் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், மலேசிய மணலுக்கு கோர்ட் அனுமதி அளித்ததாக கூறி அதற்கான உத்தரவை காட்டியும் அதிகாரிகளோடு மணல் நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.