இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மாலினி பார்த்தசாரதி ராஜினாமா!
சென்னை: இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இடைக்கால ஆசிரியராக சுரேஷ் நம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்து நாளிதழ் நிர்வாக குழுவுக்கும் மாலினி பார்த்தசாரதிக்கும் இடையே அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்து நாளேட்டின் மும்பை பதிப்பு செலவினங்கள் குறித்தே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி இந்து என். ரவி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் மாலினி பார்த்தசாரதி ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார். இந்துவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவராக இருந்தார் மாலினி பார்த்தசாரதி.
தற்போது மாலினி பார்த்தசாரதி ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் அவரது ராஜினாமாவை இந்து நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டதா? இல்லையா? என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.
இந்துவின் ஆசிரியராக இருந்த கஸ்தூரி சீனிவாசனின் மகன்வழி பேத்திதான் மாலினி பார்த்தசாரதி; இந்துவின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.
இவர் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு சித்தார்த் வரதராஜனை இந்து ஆசிரியராக கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது நிர்வாக ஆசிரியர் பதவியை மாலினி ராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.