தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கவலைக்கிடம்
சென்னை: பிரபல தொழிலதிபரும், முன்னாள் எம்.பியுமான எம்.ஏ.எம். ராமசாமியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலில் பல்வேறு கோளாறுகள் இருப்பதால் அவரது நிலை மோசமாகி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
103 ஆண்டு கால பாரம்பரியம் மிகுந்த செட்டிநாடு சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார் ராமசாமி. 84 வயதான அவருக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதைத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை முதல் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறுநீரகங்கள் தற்போது செயலிழந்துள்ளன. கல்லூரிலும் சேதமடைந்துள்ளது. உடல் நிலையில் முன்னேறமும் ஏற்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வயோதிகமும் கூட சேர்ந்துள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாகியுள்ளது. செட்டிநாடு அரண்மனை முதல் குதிரைப் பந்தயம் வரை ராமசாமி தொடாத துறை இல்லை. ஜாம்பவானாக திகழ்ந்து வந்த அவர் கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சமீப காலமாக ராமசாமியைச் சுற்றிலும் சர்ச்சைகளும் வெடித்தன. தனது வளர்ப்பு மகனான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை இனிமேல் எனக்கு இவர் பிள்ளையே இல்லை என்று அறிவித்தார் ராமசாமி. மேலும் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏசி முத்தையாவே செட்டிநாடு சாம்ராஜ்யத்தை கவனித்துக் கொள்வார் என்றும் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.