வளப்பு மகன் ஐயப்பன் எனக்கு இறுதி சடங்கு கூட செய்ய கூடாது: தொழிலதிபர் ராமசாமி அதிரடி
சென்னை: வளப்பு மகன் என்ற உரிமையை இழந்த ஐயப்பன் தனக்கு இறுதி சடங்கு செய்ய கூடாது என்று தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி தெரிவித்தார்.
வளப்பு மகன் ஐயப்பனுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அவருடனான உறவை ராமசாமி துண்டித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமசாமி, மேலும் கூறியதாவது:
‘நாங்கள் ஏற்படுத்தி இருக்கும் செட்டிநாடு இல்ல டிரஸ்டுக்கு நான் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறேன். அதில் என்ன இருக்கும் என்பதை நான் சொல்லக்கூடாது. அதில் இடம் பெற்றிருக்கும் டிரஸ்டிகள் தான் சொல்ல வேண்டும். உயிலில் பொதுநலன் இடம் பெற்றிருக்கும்.
நான் இருக்கப்போவது இன்னும் கொஞ்ச நாள் தான். அதுவரை என்னுடன் இருப்பவர்கள் என்னை பார்த்து கொள்வார்கள். என்னுடன் இருக்கும் உதவியாளர்கள் நான் சம்பளம் கொடுக்கவில்லை என்ற போதிலும் என்னுடன் பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐயப்பனோ என்னிடம் இருந்து ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிவிட்டார்.
நான் யாருக்காவது பணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால். அது ஏழை பிள்ளைகளுக்கு தான் கொடுப்பேன். என்னை சுற்றி இருக்கும், சமையல்காரர்கள், டிரைவர்கள் உள்பட என்னுடைய உதவியாளர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் தான் எனக்கு எல்லாமே. நான் எழுதி வைத்து உள்ள உயில் எனக்கு பின் சரியான இடத்துக்கு போய் சேரும்.
எம்.ஏ.எம்.ஆர். முத்தையா என்ற அய்யப்பன் தற்போதைய செட்டிநாடு குரூப்புக்கு நிர்வாக இயக்குனராக உள்ளார். ஐயப்பன் என் தத்துப்பிள்ளையே இல்லை, அவரை என்னுடைய மகன் என்று அழைக்க வேண்டாம். அவன் வெறும் ஐயப்பன் தான். எம்.ஏ.எம்.முத்தையா அல்ல. இதுதொடர்பான வழக்குகளில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
என்னுடைய இறப்புக்கு பிறகு என்னுடைய சொத்துகள் அனைத்தும் 2 டிரஸ்டுகளுக்கு செல்லும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளேன். மாறாக முத்தையாவோ அல்லது வேறு நபர்களோ சொந்தம் கொண்டாட முடியாது. மேலும் என்னுடைய மறைவுக்கு பிறகு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை கூட ஐயப்பன் செய்யக்கூடாது. எனது சகோதரர் முத்தய்யாதான் எனது அடுத்த வாரிசு.
இவ்வாறு அவர் கூறினார்.
(சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை... சுவீகார மகன் பற்றி நொந்து கொள்ளும் எம்.ஏ.எம்.ராமசாமி!!!)