கருணாநிதியை சந்திக்க விருப்பம் தெரிவித்த மமதா... ஏப்ரல் 11ல் நடக்கிறது சந்திப்பு!
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதாக அண்மையில் ராஜ்யசபா எம்பி கனிமொழியிடம் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 11 அல்லது 12ல் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை மமதா சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 3வது அணிக்கு விருப்பம் தெரிவித்த தெலுங்கானா முதல்வர் சந்திசேகர ராவை அண்மையில் மமதா சந்தித்தார். இதே போன்று பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மமதா சந்தித்து வருகிறார்.
காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவிடமும் 3வது அணி குறித்து மமதாக கருத்து கேட்டார். டெல்லியில் திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழியை அவர் சந்தித்ததார். இந்த பேச்சுவார்த்தையின் போது தீவிர அரசியலில் இருந்து முதுமையால் ஓய்வில் இருக்கும் கருணாநிதியை தாம் சந்திக்க விரும்புவதாக கனிமொழியிடம் மமதா தெரிவித்திருந்தார்.
கருணாநிதி தற்போது நலமுடன் இருப்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், செயல் தலைவர் ஸ்டாலினிடம் இது பற்றி பேசுகிறேன் என கனிமொழி கூறி இருந்தார். மமதாவின் இந்த விருப்பம் குறித்து தமிழ் ஒன் இந்தியா முதன்முதலில் செய்தி வெளியிட்டது . இந்நிலையில் ஏப்ரல் 11 அல்லது 12ல் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மமதா பானர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.