பேஸ்புக்கில் டாக்டர் என கூறி ரூ12 லட்சம் மோசடி.. சிக்கினார் நிஜ வசூல்ராஜா எம்பிபிஎஸ்!
பேஸ்புக்கில் பெண்களிடம் டாக்டர் என்று கூறி 12 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சென்னை: பேஸ்புக்கில் ஆர். குமார் ராஜ் என்ற நபர் தன்னை ஒரு டாக்டர் என கூறி தன்னிடம் பேசுபவர்களை எல்லாம் ஏமாற்றி இருக்கிறார். மேலும் தன்னை அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய ஆர்த்தோ சர்ஜன் என்றும் கூறியிருக்கிறார்.
இவரை நம்பி சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஏமாந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவர் பேசிய வார்த்தைகளை நம்பி அவருக்கு 12 லட்சம் பணம் வேறு கொடுத்து இருக்கிறார்.
வெவ்வேறு பெயரில் சுற்றிவந்த இவரை போலீசார் திட்டம் போட்டு கஷ்டப்பட்டு பிடித்தனர். தான் ஒவ்வொரு பெண்களையும் எப்படி ஏமாற்றினேன் என்பதை இவர் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்து இருக்கிறார்.
டாக்டராக நாடகம் ஆடிய நபர்
பேஸ்புக்கில் ஆர். குமார் ராஜ் என்ற நபர் தன்னை ஒரு ஆர்த்தோ சர்ஜன் என்று குறி சென்னையை சேர்ந்த பெண் ஒருவரிடம் பேசி இருக்கிறார். அந்த பெண்ணின் குழந்தைக்கு ஆட்டிசம் இருந்ததால் அதை குணப்படுத்துவதாக கூறியிருக்கிறார். மேலும் அந்த குழந்தையை அமெரிக்கா கூட்டி வந்தால் இலவசமாக மருத்துவம் பார்த்து தருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தான் ஹாஸ்பிட்டலில் இருப்பது போன்ற புகைபடத்தையும் பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறார்.
12 லட்சம் பணம் மோசடி
அந்த பெண்ணிடம் உங்கள் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க விசா வாங்கித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். மருத்துவம் பார்க்க பணம் வேண்டாம், விசாவுக்கு மட்டும் 12 லட்சம் பணம் அனுப்புங்கள் என்று ஆசை வார்த்தை காட்டி இருக்கிறார். இதை நம்பி அந்த பெண் உண்மையாகவே அவருக்கு பணம் அனுப்பி இருக்கிறது. ஆனால் பணம் வந்த அடுத்த நொடி அந்த நபர் தலைமறைவாகி இருக்கிறார். அவரது அக்கவுண்டும் டி- ஆக்டிவேட் ஆகி இருக்கிறது.
எம்மதமும் சம்மதம்
இதையடுத்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர்கள் விசாரணையின் படி அவர் நிறைய பெண்களை இப்படி ஏமாற்றியது தெரிய வந்து இருக்கிறது. மேலும் தனது பெயரை ஜார்ஜ், அப்துல், கெளதம் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவனாகவும் காட்டியிருப்பது தெரிய வந்தது. இவரது வலையில் சில ஆண்களும் சிக்கி இருக்கின்றனர்.
போலீஸ் தீவிர விசாரணை
சென்னையில் இவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பல காலமாக தாம்பரம் அருகில் இருக்கும் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்து இருக்கிறார். போலீசார் இவரை இன்று காலை ஆலந்தூர் மாஜிஸ்ரேட் கோர்ட்டிற்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர். தற்போது இவர் 15 நாள் காவலில் இருக்கிறார்.