68 திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட கேரளத்து ஜெகஜ்ஜால “வக்கீல் சஜீவன்” சென்னையில் கைது..!
சென்னை: கிட்டதட்ட 68 வழக்குகளில் தேடப்பட்ட சென்னையை கலக்கிய கேரள கொள்ளையன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட கொள்ளையன் பெயர் சஜீவன் என்ற வக்கீல் சஜீவன். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஒற்றப்பாலம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.
இவர் மீது சென்னையில் 28 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 40 வழக்குகளில் போலீசார் தேடி வந்தனர். ஏற்கனவே 8 முறை சிறைக்கு சென்றுள்ளார்.
10வது வகுப்பு மட்டுமே படிப்பு:
10 ஆவது வகுப்பு வரை படித்துள்ள இவர், வக்கீலுக்கு படித்துள்ளதாக ஏமாற்றி வந்தார். இதனால் இவரை "வக்கீல் சஜீவன்" என்று போலீசார் அழைத்தனர். இவர் வீடுகளில் புகுந்து திருட மாட்டார். அதிகாலை வேளையில்தான் தொழிலை தொடங்குவார்.
ஒன்லி கேஷ் திருட்டு:
பூட்டிக்கிடக்கும் அலுவலகங்கள், நிறுவனங்களில் ரொக்கப்பணத்தை மட்டும் கைவைப்பார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள அக்கா ஒருவர் மட்டும் இருக்கிறார். சென்னை வேளச்சேரியில் வசிக்கிறார். 89 ஆம் ஆண்டில் இருந்து திருட்டு தொழிலை செய்கிறார்.
பணக்கார கொள்ளையன்:
இவர் திருடி சம்பாதித்த பணத்தில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார். நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவார். அழகிகளுடன் உல்லாசம் அனுபவிப்பார். சொகுசு காரில் சுற்றுவார். திருடப்போகும் போது ஆட்டோ சவாரிதான் பிடிக்கும். இவரை பணக்கார கொள்ளையன் என்றும் போலீசார் அழைக்கிறார்கள். கொள்ளைத்தொழிலில் கூட்டணி வைப்பதில்லை. தனி ஆளாகவே தொழில் செய்து வந்தார்.
தனிப்படை அமைப்பு:
இவர் கடைசியாக சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.நகரில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து புகுந்து ரூபாய் 28 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடினார். ஆடிட்டர் அலுவலகத்தில் திருடியபோது, அங்குள்ள கேமராவில் இவரது உருவம் பதிவாகி இருந்தது. அந்த கேமரா படத்தை பார்த்து இவரை கைது செய்ய கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் இவரை தேடி வந்தனர்.
வளைத்துப் பிடித்த கமிஷனர்:
உதவி கமிஷனர் தங்கராஜ், நேற்று பகலில் தனது ஜீப்பில் நந்தனம் சிக்னல் அருகே செல்லும் போது, கொள்ளையன் சஜீவன் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார். இதைப்பார்த்த உதவி கமிஷனர் தங்கராஜ் சஜீவனை மடக்கிப்பிடித்து, கைது செய்தார். போலீசார் சஜீவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.