பொங்கல் கொண்டாட்டத்துக்காக பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – இளைஞர் கைது
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் பொங்கல் பண்டிகைக்காக பெண்ணிடம் நகை பறிக்க முயற்சித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அந்த வாலிபருடன் அந்த பெண் போராடினார்.
எனினும் 1.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். பதறிப்போன அந்த பெண் உடனடியாக சத்தம் போட்டார். இதையடுத்து சாலையில் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து அந்த வாலிபரை திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் பெயர் ரவி என்பதும், திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த இவர் பட்டாபிராமில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து வருவதும் தெரியவந்தது.
பொங்கல் பண்டிகையை தன்னுடைய நண்பர்களுடன் ஜாலியாக கொண்டாடுவதற்கு பணம் இல்லாததால் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக ரவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.