காதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்குவதற்கு செயின் பறித்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
சென்னை: சென்னை அடையாறில், காதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த சாஃப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பா.வசந்தி (42). இவர் அடையாறு காந்தி மண்டபம் அருகே உள்ள பேருந்து நிறுத்ததில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இளைஞர், பேருந்து நிறுத்தம் முன் பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் பேசுவது போல் நின்று கொண்டிருந்தாராம்.
திடீரென அந்த நபர், வசந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தி, அந்த நபரைப் பிடிக்குமாறு சத்தமிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக ஜீப்பில் ரோந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசங்கரன், முதல் நிலைக் காவலர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பைக்கில் தப்பிச் சென்ற அந்த இளைஞரை விரட்டிச் சென்றனர்.
ஓர் இடத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து அந்த இளைஞர் கீழே விழுந்தார். அவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் ஆயிரம் விளக்கு அஜிஸ்முல்க் 5-வது தெருவைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (24) என்பது தெரியவந்தது.
சாஃப்ட்வேர் இன்ஜினியரான கார்த்திகேயன், கந்தன்சாவடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், தனது காதலிக்கு பிறந்த நாள் பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் பின்னர் கார்த்திகேயன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.