சென்னை ஹோட்டல் பார்ட்டிக்கு சப்ளை.. 'பாம்பு விஷ' போதை மருந்துடன் நள்ளிரவில் சிக்கிய உ.பி. இளைஞர்
சென்னை: பாம்பு விஷம் கொண்ட போதை பொருளுடன் வட மாநில இளைஞர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் போதை மருந்து நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்து, நேற்று இரவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
திருவான்மியூர் பஸ் டெப்போ அருகே சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனையிட்டனர். இதையடுத்து அந்தக் காரில் இருந்து சிலர் தப்பி ஓடிவிட்டனர்.
நட்சத்திர ஓட்டல் பார்ட்டி
ஆனால் நிஷால் திவாரி என்ற ஒரு இளைஞர் மட்டும் பிடிபட்டார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவரிடம் இருந்து ஏராளமான போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இந்த மாத்திரைகள் எந்த வகையை சேர்ந்தவை என்பது காவல்துறையினருக்கு உறுதியாக தெரியவில்லை. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நடன விருந்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு இவற்றை சப்ளை செய்ய கொண்டு வந்ததாக திவாரி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
இந்த போதை மருந்துகளில், பாம்பு விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே கைப்பற்றப்பட்ட போதை மருந்துகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஆய்வின் முடிவில் தான் அது பாம்பு விஷம் கலந்ததா என்பது தெரியவரும்.
அரிதான விஷயம்
பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றபோதிலும், தமிழகத்தைப் பொறுத்த அளவில் பாம்பு விஷம் கலந்த போதை மருந்து என்பது அரிதான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் திருவண்ணாமலையில் உள்ள விடுதியில், ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உடல் பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதும், அதில் பாம்பு விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஏன் பாம்பு விஷம்
அந்த விவகாரம் தொடர்பாக விடுதி உரிமையாளர் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இப்போது பாம்பு விஷம் கலக்கப்பட்ட தன்மை கொண்ட போதைமருந்து சென்னையில், சிக்கியுள்ளது. ஏழு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரை இந்த போதை இறங்காது. எனவே தான் பாம்பு விஷத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. அரைலிட்டர் பாம்பு விஷம் சர்வதேச சந்தை மதிப்பில் பல கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.