திருமண தகவல் மையம் உடந்தை.. கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை திருமணம் செய்த கோவை நபர் கைது!
Recommended Video
கோயமுத்தூர்: கோவையில் 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பண மோசடி செய்த பலே நபர் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருமண தகவல் மையம் உதவியோடு நடைபெற்ற இந்த மோசடி கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளையும் பயன்படுத்தி இவ்வாறு ஏமாற்று வேலைகள் நடப்பது இதனால் அம்பலமாகியுள்ளது.
9 பெண்கள்
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தன்னை தொழிலதிபர் என கூறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் என சுமார் 9 பெண்களை மணந்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார். கோவையில் உள்ள திருமண தகவல் மையத்தில்தான் இவர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதன் வழியாகவே பெண் தேடி வந்துள்ளார்.
ரூ.3 கோடி அபேஸ்
இதேபோலத்தான், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வசதி வாய்ப்புள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். பல தொழில்கள் இருப்பதாக ஏமாற்றியதன் விளைவாக அந்த பெண்ணை அவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால் திருமணமாகி சில மாதங்களில், தொழிலில் நஷ்டம் என்று கூறி 3 கோடி ருபாயை மாமனார் வீட்டிலிருந்து பெற்ற புருஷோத்தமன் பிறகு தலைமறைவாகிவிட்டாராம்.
ஹைகோர்ட்டை நாடிய பெண்
பாதிக்கப்பட்ட அந்த பெண், புருஷோத்தமன் மீதும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவிட்டது.
சிக்கினர்
புருஷோத்தமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண தகவல் மையம் மீது கூட்டுசதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், புருஷோத்தமன் மற்றும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய மூவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.