நகைக்காக 3 வயது சிறுமி கடத்திக் கொலை... கைதான சேகர் புழல் சிறையில் அடைப்பு
எண்ணூரில் குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைதான சேகருக்கு 15 நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: எண்ணூர் குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் என்பவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் முத்து என்பவரின் மகள் ரித்திகா. 3 வயதான ரித்திகா சனிக்கிழமை திடீரென்று காணாமல் போனார். இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை திருவொற்றியூர், மணலி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்டு கிடந்தாள். உடனடியாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
ரித்திகா ஒரு பவுனில் தங்க செயின், கம்மல், வெள்ளி கொலுசு, வெள்ளிக் கொடி அணிந்து இருந்தாள். அவளது உடல் மீட்கப்பட்ட போது நகைகள் இல்லை. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நகைக்காக ரித்திகாவை எதிர்வீட்டுப் பெண் ரேவதி கொன்றதாக தகவல் வெளியானது. நகைக்காக அந்த குழந்தை கொல்லப்பட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே ரேவதியின் தந்தை, பாலியல் வன்கொடுமை செய்து ரித்திகாவை கொன்றதாக தகவல் பரவியது. ரேவதியின் தந்தை சேகரும் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
பின்னர், திருவொற்றியூர் நீதிமன்றத்தில் சேகரை போலீசார் ஆஜர்படுத்தினர். சேகருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சேகர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.