'ஜெ. பதவியேற்பு விழாவில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறும்..' போனில் மிரட்டிய நபர் கைது!
நாகர்கோவில்: ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் மிரட்டல்விடுத்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே ஹெல்ப்லைனுக்கு நேற்று இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கும் விழாவில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறும் என்று கூறி எச்சரிக்கும் தொனியில் பேசிவிட்டு போன் அழைப்பை கட் செய்துவிட்டார்.
இதனால், பரபரப்பான ரயில்வே ஹெல்ப்லைன் ஊழியர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில், செல்போனில் இருந்து அந்த அழைப்பு வந்ததும், அது நாகர்கோவில்-கோட்டாறு பகுதியிலுள்ள சிவகுமாருடையது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நாகர்கோவில் போலீசார் அலர்ட் செய்யப்பட்டு, சிவகுமார் அலேக்காக கைது செய்யப்பட்டார். இவர் போட்டோகிராபராக வேலை பார்த்து வருகிறாராம். நேற்று இரவு டாஸ்மாக் போதை தலைக்கேறிய நிலையில், போன் போட்டு இப்படி உளறிக் கொட்டியுள்ளார் என்று போலீசாரின் முதல்கட்ட கவனித்தல்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து போலீசார் உரிய வகையில் விசாரித்து வருகின்றனர்.