சென்னையில் தாய்-மகள் கழுத்து அறுத்து படுகொலை.. தப்பிய கொலையாளியை வளைத்து பிடித்த போலீஸ்
தாய் மற்றும் சகோதரியை கழுத்து அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பித்து சென்றவரை போலீசார் வளைத்து பிடித்துள்ளனர்.
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் ஓய்வுபெற்ற பொறியாளர் சண்முகம் என்பரின் மனைவி ஹேமலதா தனது மகள் ஜெயலட்சுமியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஹேமலதாவும் ஜெயலட்சுமியும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
கழுத்தறுத்து…
இந்தத் தீவிர விசாரணையின் போது, கேளம்பாக்கத்தில் கொலையாளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கேளம்பாக்கம் சென்று தலைமறைவாக இருந்த இன்று காலை பாலமுருகனை கைது செய்தனர்.
சொந்த மகனே…
விசாரணையில், தந்தையின் மரணத்தினால் கடுமையான மன அழுத்தத்தில் பாலமுருகன் பாதிக்கப்பட்டிருந்ததும், இரண்டு முறை அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. மேலும், நேற்று குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தாயிடமும் சகோதரியிடமும் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் இருவரும் மறுத்துள்ளனர்.
தகராறு…
இதனால் எழுந்த தகராறில் தாய் மற்றும் சகோதரியை கொலை பாலமுருகன் செய்துள்ளார். தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், போலீசார் பாலமுருகனை பிடித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சி
இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த தாய், மகள் கழுத்தை சொந்த மகனே அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.