ஏற்கனவே ரெண்டு.. 16 வயது அக்கா மகளை கடத்தி 3-வதாக கல்யாணம் செய்த தாய்மாமன் கைது!
16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்
ராமநாதபுரம்: ஏற்கனவே இரண்டு மனைவிகள்.. இதில் 3-வதாக 16 வயது அக்காள் மகளை கல்யாணம் செய்த தாய்மாமனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள கரிச்சான்குண்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு வயது 40. கூலிதொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். இருவருமே இவரது மாமன் மகள்கள்தான்.
இப்போது கடந்த சில மாதங்களாக முதல் மனைவி வீட்டில் கரிச்சான்குண்டு பகுதியில் தங்கி உள்ளார் பாண்டி. அந்த வீட்டின் எதிரில் பாண்டியின் அக்காள் தனது 3 மகள்களுடன் வசித்து வந்தார். இதில் மூத்த மகளுக்கு 16 வயதாகிறது. ஆனால் ஸ்கூலுக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவரிடம் அதிகமாகவே பேசிபழகியுள்ளார் பாண்டி.
இதைதவிர, வாட்ஸ்-அப் எப்ப பார்த்தாலும் நாம 2 பேரும் கல்யாணம் செய்துக்கலாம் என்றே மெசேஜ்களையும் அனுப்பி உள்ளார். 16 வயது சிறுமியோ, இதையெல்லாம் நம்பியே விட்டாள். இந்நிலையில், கடந்த 31-ந்தேதி வீட்டில் சிறுமியை காணோம். இதனால் பதறி போன தாயார் பலஇடங்களில் அவளை தேடியும் கிடைக்காததால், திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார்.
அப்போதுதான் பாண்டி தனது முதல் மனைவியின் மகள், 2-வது மனைவியின் மகனுடன் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், பாண்டியின் செல்போன் சிக்னலை ஆராய்ந்ததில், தஞ்சாவூரில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த 16 வயது சிறுமியுடன் பாண்டி, மற்றும் பாண்டியின் மகள், மகன் இருப்பதை கண்டனர்.
பாண்டியிடம் நடத்திய விசாரணையில், "சிறுமியை கடத்தி சென்று, பழனி முருகன் கோவிலில் கல்யாணம் செய்து கொண்டதாகவும், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால், தன்னுடைய 2 குழந்தைகளையும் உடன் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போக்சோவில் பாண்டி கைது செய்யப்பட்டதுடன், மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். 2 குழந்தைகளும் அவர்களின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.