மலேசியாவில் இருந்து 7 கிலோ தங்கம் கடத்திய பயணி கைது!
சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு 7 கிலோ தங்கம் கடத்திய பயணியைப் போலீசார் இன்று கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு கோலாம்பூரில் இருந்து இன்று அதிகாலை ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் சூட்கேட்சில் தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அந்த பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் 7 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ. 2.5 கோடியாகும்.
தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது பெயர் குமார் சின்னையா (48). மலேசியாவை சேர்ந்த அவர் அங்கிருந்து அதிக அளவு தங்கம் கடத்தி வந்த போது சிக்கி கொண்டார்.
தங்கம் கொண்டு வருவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னைக்கு 15 கிலோ தங்கம் கடத்திய பயணியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.